நாகை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சிபிஎம் சாலை மறியல்
நாகப்பட்டினம், ஜுன் 23- நாகப்பட்டினம் நகராட்சியில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, சிபிஎம் நகரச் செயலாளர் க. வெங்கடேசன் தலைமையில், மேலக்கோட்டை வாசல் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து மாசடைந்த குடிநீராக வருகிறது. இதனைக் கண்டிக்கும் விதமாக மேலக்கோட்டை வாசல் மெயின் ரோட்டில், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர், போராடும் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி, அனைத்துப் பகுதிக்கும் சுத்தமான ஒரே சீரான அளவில் குடிநீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. வடிவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள் தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முகேஷ் கண்ணன் உள்ளிட்ட நகரக்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.