மதுரை மாநகரம் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்காகத் தங்களின் உறுதிப்பாட்டை யும் உழைப்பையும் அர்ப் பணித்த பல எளிய தோழர் களின் பங்களிப்பைக் கண்டு வந்திருக்கிறது. அத்தகைய தோழர்களில் ஒருவர்தான் எஸ். கதிர்வேலு. மிக இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்த பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். சிவகங்கை மாவட்டத்தின் இடைக்காட்டூர் கிராமத்தில் 1937ல் பிறந்தவர் கதிர்வேலு. இவரது தந்தை ஒரு முடிதிருத்தும் தொழிலாளி. பெற்றோர் பிழைப்பிற்காக மதுரை நகரில் குடியேறினார்கள். இவரது தந்தை மதுரை யானைக்கல் பகுதியில் முடிதிருத்தும் கடையைத் துவங்கி நடத்தி வந்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால் கதிர்வேலுவின் பள்ளிக்கல்வி மூன்றாம் வகுப்போடு நின்றுவிட்டது. அந்தச் சிறுவயதிலேயே தந்தையோடு சேர்ந்து இவரும் கடையில் வேலை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் குடும்ப வருவாய்க்காக பெயிண்டிங் வேலைக்கு சென்றார்.
கதிர்வேலுவின் தாய் அப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ‘முன்னணி’ ராமசாமி அவர் களின் இணையர் சீதை அம்மாளுடன் (‘தீக்கதிர்’ நாராயணன் பெற்றோர்) சேர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தாயாரின் பணிகளால் உந்தப் பட்டவராக, அவரது ஊக்குவிப்போடு, யானைக்கல் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பொதுக் கூட்டங்களுக்குச் சென்று அரசியலை புரிந்து கொள்ளத் தொடங்கினார் மகன். முதல் முதலாக ஒரு பொதுக்கூட்டத்திற்கான பணிகளில் ஈடுபட்டதை இப்போதும் நினைவு கூர்கிறார் கதிர்வேலு. வைகை ஆற்றின் மைய மண்டபத்தில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, பி.சி. ஜோஷி ஆகியோர் கலந்துகொண்ட மாபெரும் பொதுக் கூட்டம் அது. நகரின் அன்றைய முன்னணித் தோழர்கள் நூர்லீன், மச்சக்காளை, முன்னணி ராமசாமி, எம். பாண்டி (இவர் தற்போதைய சிபிஎம் மதுரை மத்திய இரண்டாம் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவாவின் தந்தை), எம். முனியாண்டி (பல ஆண்டுகள் மதுரை நகரச் செய லாளராக இருந்தவர்), எஸ். ராமசாமி, தியாகி மருதை, ராமநாதன், வீராசாமி (எ) மணி ஆகியோ ருடன் இணைந்து அந்தப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார் கதிர்வேலு. ஒரு முடிதிருத்தும் தொழிலாளி என்று பாகுபாடு எதுவும் காட்டாமல் அனைத்து தோழர்களும் சமமாக மதித்து நடத்தியதும் ‘தோழர்’ என்றே அடையாளப் படுத்தியதும் தனது ஈடுபாட்டை மேலும் வளர்த்து விட்டது என்கிறார் கதிர்வேலு. ‘‘அன்றைக்கு யானைக்கல் பகுதியில் இருந்து பூந்தோட்டம் வரை ஒரே கட்சிக் கிளையாக இருந்தது. அக்காலத்தில் வைகை ஆறு, மேங்காட்டுப் பொட்டல், திலகர் திடல் ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். அந்தக் கூட்டங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். மதுரை நகரிலிருந்து மட்டுமல்லா மல் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் அந்தக் கூட்டங்களுக்கு வருவார்கள்’’ என்று அந்த நாட்களைப் பெரு மிதத்துடன் நினைவுகூர்கிறார் அவர்.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோழர் பி. ராமமூர்த்தி சிறையில் இருந்த படியே போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றி யின் பின்னணியில் கதிர்வேலு போன்ற தோழர்கள் மக்களிடையே ஆற்றிய களப்பணி இருந்தது. ஒருமுறை பி.ஆர். சிறையில் இருந்து ஒரு சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது மக்கள் அவரைப் பார்க்க விரும்பினார்கள். கதிர்வேலு, வீராசாமி, செல்லம் (இவர் சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செய லாளர் தோழர் முத்துகண்ணனின் தந்தை), ஆழ்வார்புரம் நாராயணன் ஆகியோர் சேர்ந்து தோழர் பி.ஆர். அழைத்துவரப்பட்ட குதிரை வண்டி யை வழிமறித்துத் தாங்களும் மக்களும் அவரைப் பார்க்க வழி செய்தார்கள். 1962ல் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஆதர வாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கதிர்வேலு ஒன்றரை மாதம் மற்ற தோழர்களோடு சேர்ந்து சிறையில் இருந்திருக்கிறார்.
வன்முறையை எதிர்த்து
1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது தோழர் கதிர்வேலு, முதலில் குறிப்பிட்ட தோழர்களுடன் தானும் கட்சியில் இணைந்தார். 1968ஆம் ஆண்டு சிலர் கதிர்வேலுவை நக்சலைட் அமைப்பிற்கு வரவேண்டும் என்று அழைத்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதைதான் சரியானது என்ற உறுதியோடு, அந்த அழைப்பை மறுத்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து செயல்படலானார்.
மக்கள் படிப்பகம்
சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை அருகில் இன்றுள்ள படிப்பகம் அன்றைக்கு வெறும் கூரை வேயப்பட்டதாக இருந்தது. நகராட்சி நிர்வா கம் அடிக்கடி வந்து படிப்பகத்தை இடித்திருக்கிறது. மீண்டும் அதை சீரமைத்து உருவாக்கினாலும், சமூக விரோதிகள் வந்து அடிக்கடி பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அவர்களையும் சமாளித்து தான் மற்ற தோழர்களும் கதிர்வேலுவும் இந்தப் படிப்பகத்தைப் பாதுகாத்தார்கள். இன்றைக்கு ‘‘படிப்பகம் அதே இடத்தில் செயல்படுகிறது என்றால் அன்றைய தோழர்கள் முன்னணி ராமசாமி, மண்டை ராமு, காந்தி, எம். முனியாண்டி, மருதை போன்ற பல தோழர்களின் போர்க்குணம்தான் முக்கியக் காரணம்’’ என்கிறார் கதிர்வேலு. தோழர் கதிர்வேலு குறிப்பிட்ட எம்.முனியாண்டி, தியாகி மருதை உள்ளிட்ட பல தோழர்கள் மக்கள் நல னுக்காக பல போராட்டங்களை நடத்திய போராளிகள். பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது போராட்டத்தை உடைப்பதற்கு நிர்வாகம் கருங்காலிகளை ஏவி விட்டது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக கட்சி நின்றது. தொழிலாளர்களுக்கும், கருங்காலி களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு கருங்காலி இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து தோழர் முனி யாண்டி, மருதை உள்ளிட்டு பல தோழர்கள் வழக்கைச் சந்திக்க வேண்டியிருந்தது. தோழர் மருதை ஒரு சலவைத் தொழிலாளி. அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இப்போதும் அவருடைய குடும்பத்தில் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என 8 பேர் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.
மதப் பழமைவாதத்தை எதிர்த்த நூர்லீன்
தோழர் நூர்லீன் கட்சி உறுப்பினர், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர். கட்சி மீது மிகுந்த பற்று டையவர். அவர் மத பழமைவாத பழக்கங்களை ஏற்றுக் கொள்ளாதவர். இதனால், அவரை ஜமாத்தார்கள் எதிலும் சேர்த்துக் கொள்ளமாட் டார்கள். அந்தச் சூழலில் அவருடைய குழந்தை இறந்துவிட்டது. ‘‘அப்போது குழந்தையை அடக்கம் செய்வதற்கு ஜமாத்தார்கள் முன்வராத நிலையில், அன்றைக்கு கட்சித் தோழர்கள் அந்த குழந்தையின் உடலை தத்தனேரி மயானத்திற்கு எடுத்துச் சென்று எந்த ஒரு சடங்கும் இல்லாமல் இறுதி நிகழ்ச்சியை நடத்தினோம்’’ என்று குறிப்பிடுகிறார் கதிர்வேலு. கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் அனந்த நம்பியார், சாமிநாத சர்மா, ஏ.கே. கோபாலன் போன்ற தோழர்கள் மதுரையில் தலை மறைவாக இருந்து வந்தார்கள். அப்போது கட்சியின் இரவு நேரக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இரவுக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்குத் தோழர் மருதை இல்லத்தில் கருவாடு வறுத்து ரசம் வைத்து சாப்பாடு கொடுக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து பாதுகாப்போடு அனுப்பி வைத்தோம்’’ என்று கூறும் கதிர்வேலு குரலில் நெகிழ்ச்சி.
பாவலர் வரதராசன் சகோதரி திருமணம்
பாவலர் வரதராசன், இசைஞானி இளையராஜா ஆகியோரின் சகோதரி திருமணம் தைக்கால் தெரு பகுதியில் தான் நடைபெற்றது. ராஜன் என்ற தோழ ரை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமண மாங்கல்யத்தில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தாலி கட்டப்பட்டது. திருமணத்தை மண்டை ராமு தலைமை ஏற்று நடத்தி வைத்தார். ‘‘இதுவெல்லாம் இன்றைக்கு அவர் களுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரிய வில்லை’’ என்கிறார் கதிர்வேலு. 1971ஆம் ஆண்டு வைகை ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் மதுரையில் கரையோரப் பகுதி மக்கள் உணவையும் உடைகள் உள்ளிட்ட உடைமைகளையும் இழந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘முன்னணி’ ராமசாமி, சீதை அம்மாள் என பல தோழர்களோடு இணை ந்து கதிர்வேலு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவும் துணிகளும் வழங்கி நிவாரணப் பணிகளைச் செய்தார். 1974ல் பெருவியாபாரிகள் அரிசியையும் மண்ணெண்ணெய்யையும் பதுக்கி வைத்ததால், விலையேற்றம் ஏற்பட்டு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு, பதுக்கப்பட்டவற்றைக் கையகப்படுத்தி ஏழை மக்க ளுக்கு நியாய விலையில் விநியோகம் செய்ய வேண்டுமென்று அறைகூவல் விடுத்தது. மக்களி டையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்தப் போராட்டத்தில் மற்ற தோழர்களோடு இணைந்து முக்கியப் பங்களித்தார் கதிர்வேலு.
சிவகாசியில்...
கதிர்வேலுவின் மனைவி அமிர்தம் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மேரியைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று சிவ காசியில் கட்சிப் பணியாற்றியிருக்கிறார். தோழர் மேரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க விருது நகர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியிருக் கிறார். சிறிது காலம் கழித்து குடும்பம் மதுரைக்கே திரும்பியது. யானைக்கல் பகுதியில் தோழர் கதிர்வேலு பல ஆண்டுகள் கட்சியின் கிளைச் செயலாளராகச் செயல்பட்டிருக்கிறார். அப்பகுதி மக்கள் பிரச்சனை களுக்காக கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங் களிலும் பங்கேற்றிருக்கிறார். அப்பகுதி தங்களின் குடும்ப பிரச்சனையாக இருந்தாலும், தனிநபர் பிரச்சனையாக இருந்தாலும் தீர்த்து வைப்பதற்கு தோழர் கதிர்வேலுவைத் தேடி கட்சி அலுவலகத்திற்கு வருவார்கள் என்று மதுரை மத்தியப் பகுதிச் செயலா ளர் ஜீவா தெரிவித்தார். கடினமான பிரச்சனைகளை யும் நளினமாகக் கையாண்டு பேசி தீர்த்து வைக்கும் திறனைப் பெற்றவர் கதிர்வேலு. தோழர் கதிர்வேலு பள்ளியில் படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். இருப்பினும், அரசியல் ஆர்வத்தால் விடாமுயற்சியோடு ‘தீக்கதிர்’ வாங்கிப் படிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பல நூல்களையும் தான் படித்து வருவதாக குறிப்பிடு கிறார். தாம் வாழும் பகுதியில் இப்போதும் மக்கள் நலனுக்காக போராட்டக் களம் இறங்கும் போராளி யாகத் திகழ்ந்து வருகிறார். கட்சி வாழ்க்கை, போர்க்குணமிக்க செயல்பாடு, போராட்ட குணம், மக்கள் நலனில் அக்கறை போன்ற இவரது அணுகுமுறையினால் இவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்டு பலர் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.
மூத்த மகன் (கதிர்வேலு-அமிர்தம்) முருகானந்தம் கல்பாலம் பகுதியில் கிளைச் செயலாளராக உள்ளார். இரண்டு மகள்கள் கட்சி ஆதரவாளர்கள். முருகானந்தத்தின் மகன்கள் ஸ்டாலின் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவரது குடும்பம் கட்சிக் குடும்பம். இளம் வயதிலேயே கட்சியில் சேர்ந்து, கட்சி நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு வழக்குகள் உள்ளிட்ட பல தாக்குதல்களை எதிர்கொண்டு, இப்போது தனது 87 வயதிலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருபவர் தோழர் கதிர்வேலு. இவரைப் போன்ற தோழர்களின் அயராத பணியினால்தான் யானைக்கல் பகுதியில் இன்றளவும் கட்சி துடிப்பாக செயல்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக தோழர் கதிர்வேலு ஆற்றிவரும் இயக்கப் பணி பாராட்டத்தக்கது பின்பற்றத்தக்கது.