ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறப்பு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
தஞ்சாவூர், ஜூலை 27- ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படி யாக அதிகரிக்கப்படும் எனவும், வெள்ள அபாய எச்சரிக்கையும் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழு கொள்ளளவில் விடுக்கப் பட்டுள்ளது. உபரிநீர் திறக்கப்பட உள்ள தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கு மாறும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறும் தெரிவிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் யாரும் நீர்நிலைப் பகுதி களில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம். அபாயகரமான இடங்களில் தன்படம் (Selfie) எடுப்பதையும், இரவு நேரங்களில் ஆற்றில் இறங்குவதையும் தவிர்த்திட வேண்டும். ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக சுழல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளிக்கச் செல்லக்கூடாது.வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும், குளிக்கச் செல்லும்போது உள்ளூர் பொதுமக்கள், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிக நீர் வரத்து உள்ளதால், அந்தப் பகுதிகளுக்கு தங்களது குழந்தைகளை விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள், தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதை தவிர்த்திடல் வேண்டும். கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என தெரிவிதத்துள்ளார்.