அமைச்சர் விளக்கம்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எந்த முடிவும் செய்யவில்லை. உலக வங்கி அளித்துள்ள கருத்துரை தொடர்பாக ஆய்வு நடத்தவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டு அறிக்கை பெறப்படும். அறிக்கையை ஆய்வு செய்து, மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சாதகமான முடிவுதான் எடுக்கப்படும். இந்த அறிக்கை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும்”என்றார்.
கூடுதல் பேருந்துகளை இயக்கத்தான் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. உலக வங்கி இந்த கருத்துரையை வழங்கியுள்ளது. எந்த பதற்றமும் தேவை இல்லை. ஆலோசகர் அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தான் எதிர்கால நடவடிக்கை இருக்கும். ஏற்கனவே இயங்கும் பேருந்துகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகளை இயக்கத்தான் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கிடைக்கும் சலுகையில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
சென்னை, மார்ச் 6 - சென்னையில் பேருந்து வழித் தடங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து திங்களன்று (மார்ச் 6) பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னையில் 625 வழித்தடங்களில் 3436 பேருந்துகளை இயக்குகிறது. பேருந்துகளில் தினசரி 35 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பெண்கள், முதியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பயணத்தை போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், ‘கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட்’ எனும் முறையில் இந்த ஆண்டு 500 வழித்தடங்களிலும், 2025 ஆம் ஆண்டு 500 வழித்தடங்களிலும் தனியார் பேருந்துகளை இயக்க ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. இதன்படி, அரசு பேருந்து வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். தனியார் பேருந்துக்கு கிலோ மீட்டருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படும். பேருந்தை இயக்கும் தனியார் நிறுவனம் தினசரி வசூல் தொகையை போக்குவரத்துக் கழகத்திடம் அளிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப் பட்ட தொகையை விட கூடுதலாக வசூலானால், கூடுதல் தொகையை போக்குவரத்துக் கழகம் எடுத்துக் கொள்ளும். குறைவாக வசூலானால், அந்த நட்டத்தை போக்குவரத்து கழகம் ஈடுகட்டும். இந்த திட்டத்திற்கு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இந்த திட்டத்தை கைவிடக் கோரி 31 பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
பல்லவன் சாலையிலுள்ள மத்திய பணிமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில்,“மாநகர பேருந்தில் பயணிக்கும் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள். இவர்கள் கட்டணமின்றி பயணிக்கின்றனர். பேருந்து வழித்தடம் தனியார்மய மானால் இந்த சலுகை பறிபோகும்” என்றார். சென்னையில் லாபத்தில் பேருந்து களை இயக்க முடியாது. ஏனெனில் அது சேவைத்துறை. எனவே, போக்கு வரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்கக் கோரி வருகிறோம் என்றும் அவர் கூறினார். போக்குவரத்துக் கழகம் இருந்தால் தான் வேலைவாய்ப்பு தர முடியும், சட்ட ஊதியம் கிடைக்கும். இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். இந்த திட்டத்திற்கு எதிராக சிஐடியு வலுவான போராட்டங்களை முன் னெடுக்கும். வேலைநிறுத்தத்தை நோக்கியும் செல்வோம். எனவே, ஒப்பந்தம் கோரியுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.