tamilnadu

img

சிஐடியு கொடிக் கம்பமும் ஜப்பான் நிறுவனத்தின் புல்டோசரும்...

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் நிசான் சிப்காட்டில் யூனி பிரஸ் ஜப்பான் நாட்டு தொழிற்சாலை அருகில் சிஐடியு கொடிக்கம்பம் மற்றும் தொழிற்சங்க பெயர்பலகை ஆகஸ்ட் 17 அன்று தொழிலாளர்கள் பங்கேற்போடு அமைக்கப்பட்டது. சிஐடியு சங்கத்தை அழித்தொழிக்கும் நோக்கோடு யூனி பிரஸ் நிறுவனம் சிப்காட் நிர்வாகத்துடன் இணைந்து வியாழனன்று (ஆக.23) சிஐடியு கொடிக்கம்பத்தையும் பெயர் பலகையையும் புல்டோசர் வைத்து தகர்த்தெறிந்தது. இந்த சம்பவம் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  யூனி பிரஸ் நிர்வாகமும் சிப்காட் நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த வன்முறைத் தாக்குதலை சிஐடியு வன்மையாக கண்டித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாம் சிஐடியு மீது தொடுக்கப்பட்டு இருக்கிற இந்த தாக்குதலை தொழிலாளி வர்க்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். பின்னர் அவரது தலைமையில் வியாழனன்று (ஆக.24) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பேரணியாக சென்று அதே இடத்தில் கொடிக் கம்பத்தை நட்டு செங்கொடியை பறக்கவிட்டனர். தங்கள் உரிமையின் மீது தொடுக்கப்பட்டிருக்கிற இந்த தாக்குதலுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆவேசத்துடன் பங்கேற்றனர். பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்டச்செயலாளர் இ.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.