திண்டுக்கல், ஆக.5 திண்டுக்கல் அருகே ஆடலூரில் வீணாகும் பலா விதைகள் மற்றும் சுளையிலிருந்து சாக்கோபைட் ஐஸ்கிரீம், அல்வா போன்ற பொருட்களை தயாரித்து முதிய தம்பதிகள் சாதனை படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் வட்டம் ஆடலூர் அருகே பூமலை கிராமத்திற்கு செல்லும் வழியில் தோட்டத்தில் வசித்து வருபவர்கள் முருகபிரசாத், ஜெயக்கொடி தம்பதியர். சென்னையை சேர்ந்த இவர்கள், இந்த ஊருக்கு வந்து ஒரு நிம்மதி யான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணினார்கள். இங்கே விளையும் பலாப்பழம் மிகவும் இனிமையாக இருந்தாலும் ஊலைப்பழம் என்றும் கஞ்சிப்பழம் என்றும் கூறுவார்கள். இந்த பழத்தை யாரும் விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். இதன் காரணமாக மரத்திலேயே பழுத்து கனிந்து பிறகு விழுந்து வீணாகிவிடும்.
இதனைப் பார்த்த இந்த தம்பதியர் இதை எப்படியாவது பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்று யோசித்தார்கள். அதன் விளைவு: பலாப் பழத்தில் இருந்தும், பலாக்கொட்டை யிலிருந்தும் பல வகையான உணவுப் பொருட்களை எந்தவித வேதிப் பொருட்களும் சேர்க்காமல் இயற்கையான உணவாக தயாரித்தார்கள். தற்போது இவர்கள் தயாரிக்கும் இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில், வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. ஒரு சின்ன வீட்டுக்குள் குடிசைத் தொழில் மூலம் இப்பொருட்களை தயாரித்து வருகிறார்கள். பலாப்பழத்தில் இருந்து பலாப்பழ ஜூஸ், பலாப்பழ அல்வா தயாரித்தனர். பலாக்கொட்டையை ஹீட்டர் மூலம் காயவைத்து அதனை பொடி செய்து பலாப்பழ சாக்கோ பைட் மற்றும் பிஸ்கட் தயாரித்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு நிறைய ப்ராடக்டுகளை தயாரிக்கத் தொடங்கினர். பல தானியங்களைக் கொண்டு இயற்கையான சத்து மாவு தயாரித்தனர். இந்தப் பகுதியில் விளையும் மலை வாழையை விரும்பி சாப்பிடுவதற்காக யானைகள் இங்கு வரும். யானைகளால் சேதப்படுத்தப்படும் வாழைத்தண்டில் இருந்து வாழைத்தண்டு தொக்கு, வாழைத்தண்டு ஊறுகாய் தயாரிக்க தொடங்கினர். பலாப்பழத்தில் இருந்து பலாப்பழ சிப்ஸ். பலாக்கொட்டையில் இருந்து பலாக்கொட்டை தொக்கு, பலாக்கொட்டை ஊறுகாய், பலாக்கொட்டை தொக்கு உருண்டை, பலாக்கொட்டை பக்கோடா தயாரித்தனர். இதே போல இப்பகுதியில் கிடைக்கும் தேனை சேகரிக்கின்றனர். காப்பிக்கொட்டையிலிருந்து காப்பி பொடி தயாரித்தனர்.
எத்தியோப்பியாவில் காப்பி தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் காப்பி இலைகளை கொண்டு டீ தயாரித்து குடிப்பதை பற்றி கேள்விப்பட்ட இவர்கள் தங்கள் காப்பி தோட்டத்தில் கீழே உதிர்ந்து, காய்ந்து, சருகாய் கிடக்கும் காப்பி செடியின் இலைகளை சேகரித்து அதில் டீ போட வேண்டும் என்று முயற்சித்து அதில் வெற்றி பெற்றனர். இன்னும் பல்வேறு திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறார்கள் இந்த ‘முதிய’ இளைஞர்கள். தங்களுக்குத் தெரிந்த உணவு தொழில்நுட்பத்தை இப்பகுதியில் வசிக்கும் சாதாரண பழங்குடி மக்களுக்கு, சுய உதவி குழுக்க ளுக்கு ஆலோசனை வழங்க அழைத்தபோது யாரும் வர வில்லை. இரண்டு இளைஞர்கள் மட்டும் வந்தார்கள். இந்தப் பகுதியில் எந்த வேலை வாய்ப்பும் இல்லை என்ற நிலை. இந்நிலையில் கோவிட் காலத்தில் பாபு, செல்வா என்ற பூமலை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள். தற்போது இந்த இளைஞர்கள் வேலை இல்லாததால் பிற மாநிலங்களுக்கு போகவில்லை. இந்த இளைஞர்கள் இந்த முதியவர்களிடம் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பதில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறார்கள். தற்போது அவர்கள் நிறுவனத்திற்கு இந்த இளைஞர்களை உரிமையாளர்களாக மாற்றி உள்ளார்கள் இந்த தம்பதியர்கள். இலமு, திண்டுக்கல்.