சென்னை, மார்ச் 15- அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மாபெரும் “புத்தகப் பூங்கா” அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செவ்வாயன்று (மார்ச் 15) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை போர்த்தி 2 லட்ச ரூபாய்க்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கினார். பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறு பான்மை நலத் துறை சார்பில் தந்தை பெரி யார் விருது பெற்றவருக்கும், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற வருக்கும் பொன்னாடை போர்த்தி 5 லட்ச ரூபாய்க்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தமிழரின் பெருமை 2 ஆயிரம் ஆண்டு காலம் என்று இதுவரை நாம் சொல்லிக் கொண்டிருந் தோம். ஆனால் தற்போது கிடைத்திருக்கக் கூடிய ஆய்வுகளின்படி 3.500 ஆண்டுகள் பழமையும், சிறப்பும் கொண்ட தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்க்கக் கூடிய பெருமக்களின் பெயரால் அமைந்துள்ள விருதுகளை, அதே புகழும் பெயரும் அறிவும் ஆற்றலும் கொண்டிருக் கக்கூடிய பெருமக்கள் இங்கே பெற இருக் கிறார்கள்.இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்குவதை தமிழ்நாடு அரசு பெருமை யாகக் கருதுகிறது. உங்களுக்கு வழங்கி யதன் மூலமாக இந்த விருது பெருமை அடைகிறது.
தீரமிகு எழுத்தாளர்கள்
தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் அவர்களது படைப்புகளின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது புத்தகங்களின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர் களைப் போலவே இருக்கும் தமிழ்த் தொண்டர் களாகவும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய தீரமிகு எழுத்தாளர்கள், கனல் தெறிக்கும் பேச்சா ளர்கள், களம் கண்ட போராளிகள், ஆய்வு அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இந்த விருது களை பெற்றுள்ளார்கள். இந்த விருது களை அவர்களுக்கு வழங்கியதன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்னொரு மிகமுக்கியமான பெருமையை அடைகிறது. வாழும் காலத்திலேயே தகுதிசால் தமிழ்த் தொண்டர்களைப் பாராட்டியது தமிழ்நாடு அரசு என்ற விருதை தமிழக அரசு அடைகிறது. இதுதான் மிக முக்கியமானது.
தமிழக அரசின் கொள்கை
யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்த கைய அங்கீகாரத்தை பெறத் தவறி னார்களோ, அதுபோன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கை யாக வைத்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறை பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வு முகமைகளைப் பொறுத்த வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு நடத்தப்படும்.
ஆலயங்களில் தமிழ்
ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம். தமிழ் அறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உரு வாக்கம், இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது, உலகப் பல்கலைக்கழகங் களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், நூல கங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கியமாமணி விருதுகள், திசைதோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என தமிழாட்சி நடந்து வருகிறது.
புத்தக பூங்கா
புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கச் சென்றபோது ஒரு அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அதற்கு இடம் தரவில்லை. அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறை வேற்றும் வகையில் மாபெரும் “புத்தகப் பூங்கா” அமைக்கவும், பாபசி அமைப்பைச் சார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று உறுதி அளிக் கிறேன். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்து பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்க கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும். விருது பெற்ற அனைவரையும் நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன். வாழ்த்து கிறேன். உங்களது ஆலொசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்த அரசுக்கு எப்போதும் தேவை. இது உங்களது அரசு. அந்த உரிமையோடு நீங்கள் வழிகாட்டுங்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன் வரவேற்றார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொறுப்பு) சரவணன் நன்றி கூறினார்.