நகைக் கடன் பெறுவதற்கான புதிய விதிமுறையை ரத்து செய்க!
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், மே 31- சாதாரண மக்களும், விவசாயிகளும் தங்களது பண தேவைக்காக நகை கடன் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை விதித்து பல்வேறு சிரமத்தை உண்டாக்கி வருவதைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், கும்பகோணம் காந்தி பார்க் எதிரே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பிரதீப் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், தஞ்சை மாவட்டச் செயலாளர் வாசு, மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன், பக்கிரிசாமி, மாவட்ட நிர்வாகி அபிமன்னன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் செந்தில், நாகமுத்து, திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் சாமிகண்ணு உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் கண்டன உரையாற்றின. ஆர்ப்பாட்டத்தில், வங்கியில் நகைக்கடன் பெற 20 வருட ஆவணம் வேண்டும் என்ற புதிய விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். ரூ.2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.