tamilnadu

img

பள்ளி மாணவர்கள் கண்டறிந்த வில் வீரன் நடுகல்

சின்னாளப்பட்டி, மார்ச்.19- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சி.பி.ஏ. கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் சி.மாணிக்கராஜ், கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.சிவகுமார் ஆகியோரின் ஆலோசனையின்படி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ஆ.கருப்பையாவுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல், கல்வெட்டு, நடுகற்கள் பற்றிய தொன்மையான வரலாற்றை நேரடி களப் பயிற்சி அளித்து அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.  இதன்படி திண்டுக்கல் மாவட்டம் கம்பளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜே.பிரசன்னா ஜூலியட் அனுமதியுடன் ஆசிரியர் க.சுப்பு உலகநாத பாண்டியன், மா.அருள்செழியன் ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்குறிச்சி அருகே உள்ள குப்பாயூர் கிராம பகுதியில் நேரடி கள ஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.  அப்போது கிருஷ்ணசாமி என்பவரின் தோட்டத்தில் ‘மூக்கரை பிள்ளையார்’ என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ‘‘வில் வீரன் நடுகல்’’ ஒன்றை மாணவர்கள் புதிதாக கண்டறிந்தனர்.

‘‘வில் வீரன் நடுகல்’’

மூன்றரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமுடைய இந்த நடுகல், கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என அறியப்பட்டது.  இந்த நடுகல் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் குப்பாயூர் என்ற பகுதியில் வாழ்ந்த ஒரு வில் வீரனின் வீர மரணத்தின் நினைவாக நடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.  இதில், வீரன் சம பங்க நிலையில் நின்று, தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முகம் தேய்ந்து உள்ள நிலையில் வீரனுக்கு வலப் பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்ட கொண்டையும், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் அணிகலன்கள் அணிவித்து அழகாக நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.  வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை கடக முத்திரையில் பிடித்தும், இடது கையில் வில்லை அதன் நடுப்பகுதியான நாபியை பிடித்தும் காட்சியளிக்கிறான். விரிந்த மார்பு, இடை சிறியதாக வீரனுக்கு உரிய உடலமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடை முதல் முழங்கால் வரையிலான அரை ஆடையும் இடையில் ஆண் வீரர்கள் அணியும் அரைப்பட்டிகை என்னும் அணிகலன் மணிகளுடன் காணப்படுகிறது.  வலது பக்கமாக இடையில் செருகிய வாள் ஒன்று முழங்காலுக்குக் கீழ் வரை தொங்குவது போன்று உள்ளது. வீரனுடைய வீரக்கால் பாதங்களும் வீரனுக்கு இடப் பக்கமாக திரும்பிய நிலையில் உள்ளது. வீரத்திற்கு அடையாளமாக வீரர்கள் அணியும் வீரக்கழல் என்ற அணிகலனும் பரியகம் என்னும் அணிகலனும் காலில் உள்ளன.  இது போன்று மாணவர்களை நேரடியாக கள ஆய்வு பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்கு தொன்மையான வரலாற்றுச் சின்னங்கள் கல்வெட்டுகள் நடுகற்களையும் அதன் வரலாற்றையும் எடுத்துக் கூறினர்.