இந்து சமயம் சமூக சமத்துவ கோட்பாடுகளை ஏற்கவில்லை. அதற்கு மாறாக மக்களை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசினர்கள், சூத்திரர்கள் என வகைப்படுத்தி ஏற்றத்தாழ்வை ஊட்டி வளர்க்கிறது. இதன் காரணமாக தற்போது பகைமை ஏறு படியிலும் சுயமதிப்பு இறங்கு படியிலும் நிற்கின்றன. இந்த சதுர்வர்ண சம்பிரதாயம் தான் எல்லா விதமான ஏற்றத்தாழ்விற்கும் ஆணிவேர். சாதி அமைப்பின் தோற்றுவாய். சதுர்வர்ண சித்தாந்தமும் சாதிய முறையும் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கு ஒவ்வாதவை, முரண்பாடானவை. இந்த சித்தாந்தம் இந்து சமயத்தின் அச்சாணியாக ஆதார அடிப்படையாக இருக்கும் வரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து தாழ்த்தப் பட்டவர்களாகவே, கீழானவர்களாகவே கருதப்பட்டு வருவார்கள். தாங்கள் இந்துக்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறுவது தங்களது தாழ்ந்த அந்தஸ்து நிலையை தங்கள் வாயாலேயே ஒப்புக் கொள்வதற்கு சமம். சதுர்வர்ண கோட்பாடுகள் கைவிடப்பட வேண்டும். - டாக்டர் அம்பேத்கர்
காளப்பட்டி - 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டத்தின் ஒரு கிராமமாக இது இருந்தது. ஊராட்சியாக இருந்து பிறகு பேரூராட்சியாக உயர்ந்து தற்போது கோவை மாநகராட்சியின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. காளப்பட்டியின் மக்கள் தொகை 30,000க்கும் அதிகம். அதில் அருந்ததியர்களின் எண்ணிக்கை மட்டும் ஆறா யிரத்தை தாண்டும். காளப்பட்டி தற்போது மாநக ராட்சியின் 4 வார்டுகளாக உள்ளன. இங்குள்ள சாதி இந்துக்களுக்கே மிக கணிச மான நிலம் சொந்தமானது. 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் இக்கிராமத்தில் செழிப்பான தாக இருந்தது. அன்று சாதி இந்துக்களின் விவசாய நிலங்களில் அருந்ததியர் மக்கள் விவசாய கூலித் தொழிலாளர்களாக வேலை செய்தார்கள். இன்றைய நிலைமை பெரிதும் மாறிவிட்டது. விவசாய நிலம் முழுவதும் அநேக மாக ரியல் எஸ்டேட் நிலமாக மாறிவிட்டது. காளப்பட்டி கோவை விமான நிலையத்திற்கு அருகே இருப்பதால் அங்கு நிலத்தின் மதிப்பு பெருமளவு உயர்ந்துவிட்டது. இதனால் அந்த நிலங்கள் முழுவதும் வீட்டு மனைகளாவும் தொழிற் கூடங்களாகவும் மாறிவிட்டன. இதனால், விவசாய தொழிலாளர்களாக இருந்த அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர்கள் வேறு பணிகளுக்கு மாறிவிட்டார்கள். கட்டு மானத் தொழிலாளர்களாகவும் இதர அணி திரட்டப்படாத கூலி உழைப்பாளர்களாகவும் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்திய சாதி அமைப்பில் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த வர்கள் மிகவும் அடித்தட்டை சார்ந்தவர்கள். ஆம். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டை களாக அருந்ததியர்கள் உள்ளனர். இச்சமூ கத்தில் ஆண்டாண்டு காலமாக இவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும்,
தீண்டாமை கொடுமை களுக்கும் ஆளாகி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் மிகக் கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளும், அருந் ததியர் மக்கள் மீதான தாக்குதல்களும் நடந்தன. அச்சம்பவங்களை இன்று நினைத்தாலும் நம் நெஞ்சம் பதறுகிறது. காளப்பட்டியிலிருந்து அவி னாசி மெயின் ரோடு 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்ல வேண்டுமானால் மக்கள் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்துவார்கள். ஒருமுறை சாதி இந்துக்கள் ஏறிய ஷேர் ஆட்டோ வில் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சிலரும் ஏறிவிட்டார்கள். சாதி இந்துக்களுக்கு சமமாக அருந்ததியர் மக்கள் ஷேர் ஆட்டோவில் அமர் வதா? என ஆத்திரமடைந்தனர் சாதிய சக்திகள். தாங்கள் தீட்டுப்பட்டு விட்டதாக கருதி கடும் சொற்களை வெளிப்படுத்தினர். அதோடு நிற்கவில்லை. அருந்ததியர் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் தொடர்கதையாக பல நாட்கள் நீடித்தது. அதோடு அருந்ததியர் மக்களின் வீடு களை அடித்து நொறுக்கினர். ஏராளமான அருந்த தியர் மக்களின் வீடுகள் தீயில் பொசுங்கின. இத்த கைய தாக்குதல் சம்பவம் காளப்பட்டியில் மட்டு மல்ல, சுற்றுவட்டார ஏராளமான கிராமங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காவல்துறையை பொறுத்தவரை அருந்த தியர் மக்களை தாக்கிய சாதி இந்துக்கள் மீது முதலில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அருந்ததியர் அமைப்புகளும், இடதுசாரி இயக்கங்களும் இத்தாக்குதலை கண்டித்து போராட்ட நடவடிக்கைகளில் இறங்கின. அதன் பிறகே, காவல்துறை அசைந் தது. 150க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இருப்பி னும், இரு தரப்பிலும் பல்வேறு சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தற்போது முக்கியமான பிரச்சனைக்கு நாம் வருவோம். காளப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் பிரபலமான கோவிலாகும். அக்கிரா மத்தின் சுற்று வட்டாரத்திலுள்ள 12 கிராமங்க ளுக்கு இக்கோவில்தான் பிரதான கோவி லாகும். ஆனால், இக்கோவிலுக்குள் தலித் மக்களாகிய அருந்ததியர்கள் நுழைய முடி யாத நிலை இருந்தது. நுழைந்தால் கோவில் தீட்டாகி விடுமாம். எனவே, சாதி இந்துக்கள் இவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இப்பிரச்சனை செங்கொடி இயக்கத்தின் கவனத்திற்கும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் அருந்ததியர் அமைப்புகள்தான் இப்பிரச்சனையை பற்றி எடுத்துக் கூறினர். இதையறிந்த செங்கொடி இயக்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் களத்தில் இறங்கின. ஆம். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இதில் அருந்ததியர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அப்போது ஆதி தமிழர் விடுதலை முன்னணியின் அமைப்பாளராகவும், தற்போது ஆதி தமிழர் பேரவையின் பொதுச் செயலாளராகவும் உள்ள ரவிக்குமார் தான் இம்மாநாட்டில் காளப்பட்டி மாரியம்மன் கோவில் பிரச்சனையை எழுப்பினார்.
மாநாட்டு விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர் குறிப்பிட்ட தாவது: “கோவை மாவட்டம், காளப்பட்டி கிராமத்தில் உள்ள பிரபலமான மாரியம்மன் கோவிலில் தலித் மக்கள் - அருந்ததியர் மக்கள் நுழைய முடியாது. இக்கோவில் உருவாகி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆயினும், காலம்காலமாக அருந்ததியர் மக்களை இக்கோவிலுக்குள் சாதிய சக்திகள் அனுமதிப்பதில்லை. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை உடைத்த - தலித் மக்கள் நுழைய முடியாத பல ஆலயங்களில் தலித் மக்களை திரட்டி ஆலயப் பிரவேசப் போராட்டங்களை வெற்றி கரமாக நடத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி அருந்ததியர் மக்களை அணிதிரட்டி காளப்பட்டி மாரியம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தை நடத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அவர் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்தாயிரம் பேர் பங்கேற்ற மாநாட்டு பொதுக்கூட்டத்திலும் இத்தீர்மானம் ஒரு பிரகடனமாக அறிவிக்கப்பட்டது. மாநாட்டு தீர்மானம் தமிழக அரசிற்கும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 2011 ஜூலை மாதம் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட மாநாட்டிலும் இப்பிரச்சனை குறித்து தமிழக அரசு - மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக காளப்பட்டி மாரியம்மன் கோவிலில் தலித் மக்கள் - அருந்ததி யர் மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் திட்டமிடவில்லை எனில் அம்மக்களை அணிதிரட்டி செங்கொடி இயக்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ஆலயப் பிரவேசத்தை விரைவில் நடத்துவோம் என அறிவிக்கப்பட்டது.
உலகமே நம் கையில் என்று செல்போன்களையும், கம்ப்யூட்டர்களையும் காட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் எல்லா மனிதர்களையும் போலவே ரத்தமும், சதையும் கொண்ட அருந்ததியர் சமூகத்தினரை சாதி பாகுபாடு காட்டி மாரியம்மன் கோவிலுக்குள் சாதிய சக்திகள் அனு மதிக்காத போக்கை உடைத்தெறிவோம் என அம்மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது. போராட்டத்தின் முதல்கட்டமாக, 2011 ஆகஸ்ட் 8 ஆம் நாள் அருந்ததியர் மக்களை காளப்பட்டி மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி கோவை மாநகரம் செஞ்சிலுவை சங்கத்தின் முன்பு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், மாவட்ட செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர். அதன்பிறகும், தமிழக அரசின் தரப்பில் அசைவில்லை என்றபோது ஆலயப் பிரவேசப் போராட்டத்தை அறிவித்தது செங்கொடி இயக்கம். ஆம். 2012 செப்டம்பர் 30 ஆம் நாள் செங்கொடி இயக்க போராளி அமரர் சீனிவாசராவ் நினைவு தினத்தன்று காளப்பட்டி மாரியம்மன் கோவிலில் தலித் - அருந்ததியர் மக்களை திரட்டி ஆலயப் பிரவேசம் நடைபெறும் என அறிவித்தன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்தபடி அன்றைய தினம் காலையில் ஆலயப் பிரவேச அணிவகுப்பு புறப் பட்டது.
இப்போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் அணி திரண்டனர். ஏராளமான அருந்ததியர் மக்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக அருந்ததியர் அல்லாத இதர சாதி இந்து உழைப்பாளிகளையும் அணிதிரட்டின செங்கொடி இயக்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும். முன்னணியின் தலைவர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஐ(எம்) அன்றைய மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, அன்றைய சிஐடியு தலைவரும், இன்றைய சிபிஐ(எம்) மாவட்ட செயலாளருமான சி.பத்மநாபன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் யு.கே.சிவஞானம், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் அமிர்தம், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கே.கனகராஜ், ஆதி தமிழர் பேரவையின் நிறுவனர் இரா. அதியமான், ஆதி தமிழர் விடுதலை முன்னணியின் அன்றைய பொதுச் செயலாளர் ரவிக்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.பாபு, அருந்ததியர் அமைப்பின் முக்கியத் தலைவர் வெண்மணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முக்கியத் தலைவர் ஆறுச்சாமி ஆகிய தலைவர்கள் முன்வரிசையில் வர அணிவகுப்பு ஆர்ப்பரித்து மாரியம்மன் கோவிலை நோக்கி சென்றது. ஆலயத்தைச் சுற்றிலும் ஏராளமான ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் திரட்டப்பட்டிருந்தனர்.
பல வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊர்வலத்தின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். அருந்ததியர் மக்களை இதுவரை ஆலயத் திற்குள் நுழைய முடியாதபடி தடுத்திருந்த சாதிய சக்திகளோ ஆங்காங்கு செய்வதறியாது திகைத்து நின்றனர். தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து தலைவர்கள் புடைசூழ அருந்ததியர் மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர். அருந்ததியர் மக்களின் ஒரு நூற்றாண்டு கனவு அன்று நனவானது. அம்மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. உணர்ச்சிப் பிரவாகமாக தாங்கள் விரும்பிய கோவிலில் வழிபாடு நடத்தினர். அவர்கள் நுழைந்தால் எந்த கோவில் தீட்டாகிவிடும் என சாதிய சக்திகள் அலறினார்களோ, அந்த கோவில் முழுவதும் அருந்ததியர்களின் மூச்சுக் காற்று பரவியது. காற்று மண்டலத்துடன் அது கலந்து போனது. அனைத்து சமூகப் பிரிவினரின் சுவாசப் பைகளையும் அது நிரப்பியது. காளப்பட்டியில் நீண்ட காலம் நிலவிய தீண்டாமையின் ஒரு வடிவமான ஆலயத் தீண்டாமை அன்று அகன்று போனது - இல்லை அகற்றப்பட்டது. இன்றளவும் அருந்ததியர் மக்கள் மாரியம்மன் கோவிலில் மகிழ்ச்சியுடன் வழிபாடு நடத்துகின்றனர். தீண்டாமை ஒழிப்பு ஜோதியை அனைத்து ஜனநாயக சக்திகளும் நெஞ்சில் ஏந்துவோம். சமூகத்தில் நிலவும் மொத்த தீண்டாமையையும் ஒழித்துக் கட்டுவோம் - தொடர்ந்து இந்திய சாதி அமைப்பையும் முற்றிலும் ஒழிப்போம்.