tamilnadu

img

பின்னோக்கி ஓடி அரியலூர் இளைஞர் சாதனை

பின்னோக்கி ஓடி அரியலூர் இளைஞர் சாதனை

அரியலூர், ஜுன் 26-  பின்னோக்கி ஓடும் தடகள போட்டியில் உலக சாதனை படைத்த அரியலூர் இளைஞர், 13.54 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.  அமெரிக்காவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றும், இதற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகேயுள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் மகன் ஆறுபடையப்பா (24). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்தார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை போன்று சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தது.  உசேன் போல்ட் முன்னோக்கி ஓடி சாதனை படைத்தது போன்று இல்லாமல், நாம் பின்னோக்கி ஓடி சாதனை படைத்தால் என்ன என்று இவரது மனதுக்குள் தோன்றியது. தொடர் பயிற்சி காரணமாக பின்னோக்கி ஓட ஆரம்பித்த ஆறுபடையப்பா, பயிற்சியின் போது பலமுறை விழுந்து, எழுந்து காயம் பட்டுள்ளார். ஆனாலும் மனம் தளராத அவர், தனது விடாமுயற்சியை கைவிடாமல் பின்னோக்கி ஓடுவதை நிறுத்தவில்லை. இதன் பயனாக பஞ்சாப் இந்தியன் நேஷ்னல் புக் ஆப் ரெக்கார்ட்சில் 14.40 வினாடியில் 100 மீட்டரை பின்னோக்கி ஓடி சாதனை படைத்துள்ளார்.  இந்நிலையில், உலக சாதனையில் இடம்பெறும் வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் லயனிஸ் வேர்ல்டு ரெக்கார்ட் குழு சார்பில் போட்டி நடைபெற்றது. லேனிஷ் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற நூறு மீட்டர் பின்னோக்கி ஓடும் போட்டியில் ஆறுபடையப்பா 13.54 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆறுபடையப்பா முதல் இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.