tamilnadu

போலி ஆவணம் மூலம் பறித்துக் கொண்ட சொந்த வீட்டை மீட்க போராடும் இளைஞர்

தரங்கம்பாடி, ஜூன் 13- நாகை மாவட்டம்,பொறையார் அருகே யுள்ள சங்கரன்பந்தலில் சொந்த வீட்டை ரவுடி யிடமிருந்து மீட்டுத் தருமாறு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து பாதிக்கப்பட்ட பெரோஜ் தீன் என்கிற அந்த இளைஞர் கூறும்போது, சங்கரன்பந்தல் முஸ்லீம் கீழத்தெருவில் எங்களுக்கு சொந்தமான மாடி வீட்டில் வசித்து வந்தோம். எனது தந்தை  ஜபுரூதின் இறந்து விட்ட நிலையில் நாங்கள் வசித்து வந்த மாடி வீட்டை அருகேயுள்ள இலுப்பூரை சேர்ந்த பாத்திமா ஜின்னா என்பவர் சொந்தம் கொண்டாடி வந்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 2009 லிருந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வழுவூரை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட, பல்வேறு சாதிப் பிரச்சனைகள், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து களில் தொடர்புடைய வீ.ஜி.கே,மணி என்பவர் பாத்திமா ஜின்னாவிற்கு ஆதரவாக எனக்கு தொடர்ந்து  கொலை மிரட்டல் விடுத்ததோடு, பலமுறை அவரது  அடியாட்களை கொண்டு என்னை தாக்கியும், எனது வீட்டை சேதப் படுத்தியும் வந்தார்.

இது தொடர்பாக ஐ.ஜி, எஸ்.பி, டி.எஸ்.பி,  மற்றும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவரின் ஆதரவோடு மணி என்னை மிரட்டி வந்தார். இந்நிலையில் என் மீது பொய்வழக்கு ஒன்றை கொடுத்துவிட்டு எங்களுக்கு சொந்த மான நான் குடியிருந்து வரும் வீட்டை அவரது நண்பரான தொழுதாலங்குடியை சேர்ந்த சந்துரு (எ) சந்திரசேகர் பெயருக்கு பொய்யான ஆவணங்களை வைத்து முறை கேடாக மாற்றியுள்ளார். இது சம்பந்தமா கவும் புகார்கள் அளித்தும் நடவடிக்கைகள் எதுவுமில்லை.மாவட்ட நிர்வாகம் உடனடி யாக எங்களுக்கு சொந்தமான வீட்டை மீட்டுத்தர வேண்டும். எனக்கும்,எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ள வழுவூர் வீ.ஜி.கே மணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நடவடிக்கை இல்லாத நிலையில் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் பெரோஜ் தீன் கண்ணீர் மல்க கூறினார்.