புதுதில்லி:
கொரோனா வைரஸுக்காக இதுவரை நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்திற்கும்) அதிகமான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதன்மையானது பரிசோதனைகள் செய்யப்படுவதாகும். இந்தியாவில் ஐனவரி 30-ஆம் தேதி முதல் இதுவரை 10 லட்சத்திம் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
உயிர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒரு நாளைக்கு 70,000-75,000 க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டது. மார்ச் 31-ஆம் தேதி வரை, 47,852 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மொத்தம் 9,02,654 மாதிரிகளாக அதிகரித்துள்ளது. மே 1 முதல் மே 2 மாலை வரை 1,37,346 சோதனைகள் செய்யப்பட்டன.
ஐசிஎம்ஆர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாடெங்கும் கொரோனா வைரஸ் நோயைக் கண்டறிவதற்காக 310 அரசு ஆய்வகங்கள் மற்றும் 111 தனியார் ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள இந்த ஆய்வகங்களில் மே 3-ஆம் தேதி வரை காலை 10 மணி வரை மொத்தம் 10,46,450 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.