இன்று சர்வதேச உணவு தினம். சர்வதேச அளவில் பட்டினியை எதிர்ப்பதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் வாடுபவர்களை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் பசி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டினி பட்டியலில் உலகின் 117 நாடுகளில் இந்தியா 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 30.3 புள்ளிகளுடன் இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டினி குறியீடு, ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள, சரிவிகித உணவு கிடைக்கிறதா..? 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டிருக்கிறார்களா 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப உயரத்தைக் கொண்டிருக்கிறார்களா குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படி கணக்கிடப்பட்ட இந்த பட்டியலில் இந்த ஆண்டு இந்தியா 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு உலக அளவில் இந்தியாவுக்கு பின்னர் 16 நாடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு பின்னால் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. இதில் இந்தியாவை சுற்றி உள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட முன்னிலை பெற்றுள்ளது.
இவை மட்டுமல்லாமல், நைஜீரியா, கானா, கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளும் இந்த பட்டியலில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. வறுமைக்கு பெயர்போன ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் உள்ள குழந்தைகளின் நிலை மோசமாக உள்ளது இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.