குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 17) முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் புதனன்றும் தொடர்ந்தது. போராட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் பல்கலைக்கழக அனைத்து வாயில்களையும் இழுத்து பூட்டினர்.
மத்திய அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விஷாரம் தனியார் அப்துல் ஹகீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.