மூன்றாம் முறையாக ஆம் ஆத்மி ஆட்சி
புதுதில்லி,பிப்.11- தில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. மத்தியில் ஆளும்கட்சியாக உள்ள பாஜகவின் மாநில ஆட்சிக்கனவை தலைநகரிலே மக்கள் தவிடுபொடியாக்கினர். மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியை தழுவிய பாஜக தலைநகர் தில்லியிலும் மண்ணைக் கவ்வியது. தில்லி மாநில தேர்தல் முடிவுகள், பிரிவினைவாத சக்திகளுக்கு கிடைத்த அடி என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி மாநில சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 8 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடை பெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் பிப்ர வரி 11 அன்று 21 மையங்களில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. 8 மணிநிலவரப்படி 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 8 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெற வில்லை. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்ததால் ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் பகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி
தில்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. ராமகிருஷ்ணாபுரம் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பரிமளா டொகாஸ் முன்னிலையில் உள்ளார். கரோல் பாக் தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேந்திர சந்தோலியாவை விட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் விஷேஷ் ரவி 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திருலோகபுரி தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரணை விட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ரோஹித் குமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ”வளர்ச்சித் திட்டங்கள் வகுப்புவாத அரசியலை முறியடிக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய நம்பிக்கைகள் இந்தியாவில் பலப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தில்லி மக்களின் வெற்றி: கெஜ்ரிவால்
தில்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், தில்லி தேர்தல் வெற்றி ஆம் ஆத்மியின் வெற்றி அல்ல; தில்லி மக்களின் வெற்றி. மூன்றாவது முறையாக எங்களுக்கு வெற்றியை கொடுத்த தில்லி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வெற்றியை தில்லி மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். தில்லி மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம். நாட்டில் புதிய வகையான அரசியல் பிறப்பதற்கு தில்லி தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமைந்துள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கான அரசியலை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று தெரிவித்தார். தில்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்கு அதன் தலைவர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைப்போம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகும்.