தில்லியில், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்காளின் எண்ணிக்கை 5.5 லட்சத்தை எட்டும் என்று அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அந்நகர உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்று அம்மாநில அரசின் அறிவித்திருந்தது. இந்த, ஆணையை அம்மாநில துணை நிலை ஆளுநர் ரத்து செய்துள்ளார். இந்த நிலையில், இன்று துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் மற்றும் மத்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மணிஷ் சிசோடியா, தில்லியின் ஒவ்வொரு 12 - 13 நாட்களுக்கு நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் ஜூலை 31-ஆம் தேதிக்குள், தில்லியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 லட்சமாக எட்ட வாய்ப்புள்ளது. அப்போது நமக்கு 80,000 மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும். இந்த கணக்கீடுகளை கவனத்தில் கொண்டு தில்லி அரசின் மருத்துவமனை படுக்கைகள் குறித்தான உத்தரவை ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.