புதுச்சேரி, செப். 2- பாஜகவினரை ஆளுநர்களாக நியமனம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநராக பாஜக தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில் புதுச்சேரியில் செப்டம்பர் 2 திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயண சாமி, “தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அவருக்கு வாழ்த்துக்கள். சர்காரியா கமிஷனின் பரிந்துரையில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுநர்களாகவோ அல்லது துணை நிலை ஆளுநர்களாகவோ நியமிக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரசும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை ஆளுந ராக நியமனம் செய்துள்ளதுதான். இல்லையென்று சொல்ல வில்லை. ஆனால் பாஜக அரசு அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரையும், பாஜக நிர்வாகிகளையும் ஆளுநர்களாக நியமித்து வருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது” என்று தெரிவித்துள்ளார். புதுவை துணை நிலை ஆளுநராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, பாஜகவில் இணைந்து அக்கட்சியின் சார்பில் தில்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதுவை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.