புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாகவும், பின்னர் சடலத்தை சாக்குப்பையில் கட்டி கால்வாயில் வீசியதாகவும் போலீசாரால் கைது செய்யப்பட்ட கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) வாக்குமூலம் அளித்துள்ளனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த 2-ஆம் மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்ற சேர்ந்த 9 வயது சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் சிறுமியின் தோழிகளின் வீடுகளில் தேடியுள்ளனர். சிறுமி குறித்து தகவல் கிடைக்காத நிலையில் இது குறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியைத் தேடி வந்தனர். இதற்கிடையில் சிறுமி குறித்து தகவல் கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுமி வீட்டின் அருகே உள்ள பாதாளச் சாக்கடையில் மூட்டை ஒன்று மிதந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை சோதனை செய்தபோது, அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது. சிறுமியின் உடல் போர்வை மற்றும் வேட்டியால் சுற்றி சாக்கடையில் வீசப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதை அடுத்து சிறுமி கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாகவும், பின்னர் சடலத்தை சாக்குப்பையில் கட்டி கால்வாயில் வீசியதாகவும் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூறு ஆய்விற்குப் பின்பு தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் கடற்கரை சாலை காந்தி சிலை, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.