புதுக்கோட்டை, ஆக.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மனுக்கு மண்ணின் மைந்தர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சோசியல் சர்வீஸ் கிளைப் என்ற அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் 20-ம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி வருவதை பாராட்டடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மனுக்கு ‘மண்ணின் மைந்தர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதினை ராட்சசி திரைப்பட இயக்குநர் கௌதமராஜ் வழங்கினார். அவர் பேசுகையில், கவிவர்மன் அரசியல் வாதியாக மட்டுமில்லாமல் சிறந்த கவிஞராகவும் பல்வேறு கவிதைகளைப் படைத்துள்ளார். மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதோடு, பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். கணினி முதல்முறையாக செயல்பாட்டுக்கு வந்த காலத்தில் அதற்கான மையத்தை உருவாக்கி அறந்தாங்கி நகரம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இளைஞர்களுக்கு கணினி அறிவையும் வளர்த்துள்ளார். இப்படிப்பட்ட சிறந்த நபருக்கு இவ்விருதை வழங்குவதில் பெருமையடைகிறேன் என்றார். விழாவிற்கு கராத்தே ராஜா தலைமை வகித்தார். அறந்தாங்கியில் இருந்து சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர்களாக உருவெடுத்துள்ள போஸ் வெங்கட், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் கவிவர்மனைப் பாராட்டிப் பேசினர். முன்னதாக சுப்பிரமணியன் வரவேற்க, காசி நன்றி கூறினார்.