பீகாரில் நோயால் தாக்கப்பட்டு குழந்தைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர். இந்த பாதிப்பிலிருந்து அம்மாநில நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாட்னாவில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் கயாவிற்கு விரைந்துள்ளனர்.மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.