tamilnadu

img

பத்திரிகையாளர் எஸ். விஸ்வநாதன் காலமானார்

‘பிரண்ட்லைன்’ முன்னாள் ஆசிரியர்

சென்னை, நவ. 6- தமிழகத்தின் மூத்த இதழாளர்களில் ஒருவரும் பிரண்ட்லைன் ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியரும், இந்து ஆங்கில ஏட்டின் முதல் வாசக ஆசிரியருமான தோழர் எஸ்.விஸ்வநாதன் (80) செவ்வாய்க்கிழமை காலமானார்.  ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட் டில் 32 ஆண்டுகாலம் பணியாற்றிய  அவர் பின்னர் இந்து குழுமத்தில் பிர ண்ட்லைன் இதழில் பணியாற்றினார். தமிழ்நாட்டில் 1990களிலும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிகழ்ந்த சாதிய வன்கொடுமைகள் எல்லாவற்றையும் நேரில் சென்று ஆய்வுசெய்து,பிரண்ட்லைன் இதழில் அவர் கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கிறார். பின்னர் அவை நூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்ச் சமூகத்தின் சாதிய வர்க்க முரண்களை, அவற்றின் வேர்களை நன்கு அறிந்தவராக விஸ்வநாதன் விளங்கினார். மற்ற ஊடகவிய லாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டாத கல்விப் பிரச்சனைகள் குறித்து அவர்  ஏராளமான கட்டுரைகளை எழுதி யுள்ளார்.  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர், தமிழகத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல், பிரச்சினைகள் அதில் இடதுசாரிகளின் தலையீடு குறித்து தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார். அதை ‘திராவிட நிலத்தில்  தலித்துகள்’ என்ற பெயரில் ஆங்கி லத்தில் நவயான பப்ளிகேஷனும், வெளியிட்டது. இளைஞர் முழக்கத்தில் வசந்தன் என்ற பெயரில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். இந்திய மாணவர் சங்கத்தின், வாலிபர் சங்கத் தின் மாநில பயிலரங்குகளில் பல முறை வகுப்பெடுத்துள்ளார். ஏழை, எளிய மக்கள் பிரச்சினைகள் குறித்து அதிகம் எழுதியவர். தீக்கதிர் நாளேட்டின் ஆசிரியர் குழுவின் பயி லரங்கிலும் பங்கேற்று வழிகாட்டி யவர். 

அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், , விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் எம்.பி., பிரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கள் க.கனகராஜ், பெ.சண்முகம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், எஸ்.கே.மகேந்திரன், ஜி.செல்வா, லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் சு.லெனின்சுந்தர், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் கே.சாமுவேல் ராஜ், க.சுவாமிநாதன்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  ரெஜிஸ்குமார், நிர்வாகி கார்த்திஷ் குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், இரா.தெ.முத்து (தமுஎகச), நாட வியலாளர் பிரளயன், எழுத்தாளர் வீ.பா.கணேசன், டி.ஆர்.இ.யு. துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரன், தீக்கதிர் சார்பில் செய்தியாளர் செ.கவாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும், உறவினர்களும், நண்பர்களும் பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்தினர்.

புதன்கிழமையன்று அவரது உடல் அம்பத்தூர் கோல்டன் காலனியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. விஸ்வநாதனுக்கு ரத்னா என்ற மனைவியும், சண்முகசுந்தரம் என்ற மகனும், மீனாட்சி, சிதம்பர சங்கரி என்ற இரண்டு மகளும் உள்ளனர்.