ஏஞ்சலிகா ஆப்ரஹாம் டெல்லியில் படிக்கும் வடகிழக்கு மாநில மாணவி இவர்.சில தினங்களுக்கு முன்பு உலகில் பாதுகாப்பான இடம் ஏதும் இருந்தால் அங்கு செல்லவேண்டும் என்று டுவிட் செய்கிறார்.
"வுகான்" செல்லுங்கள் அங்கு தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என உடனடியாக பதில் வருகிறது.
அதிர்ந்த ஏஞ்சலிகா டெல்லி சைபர் கிரைமில் புகார் தருகிறார்.மேற்கண்ட நபர் மீது மட்டுமல்ல,புதுச்சேரி கவர்னர் கிரன்பேடி பற்றியும் புகாரில் குறிப்பிடுகிறார்.திருமதி கிரன்பேடி செய்துள்ள டுவிட்டில் ஒரு படம் இருக்கின்றது.ஒரு கூண்டிற்குள் சீனர்கள் இருக்கிறார்கள்.கூண்டைச் சுற்றி ,பன்றி,பாம்பு,பறவைகள் என படங்கள் இருக்கிறது.அதில் உள்ள வாசகம் கொரோனா மட்டுமல்ல புலால் உண்பதும் ஒரு வன்முறையே என்பதே.சீனர்கள் மீது கிரண்பேடி அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கிறது.அது போலவே எனக்கு டுவிட் செய்தவருக்கும் சீனர்கள் மீது ஒவ்வாமை இருக்கிறது.வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த நாங்களும் சீனர்கள் போலவே இருப்பதால் எங்கள் மீது பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இது இன்று மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது வருகிறது.
ரமேஷ் ஓரி இவர் மணிப்பூரை சேர்ந்தவர்.கடந்த 22 ம் தேதியன்று ஊரடங்கு நிறைவு பெற்றபிறகு மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு செல்கிறார்.மிக அருகில் இருசக்கர வாகனம் வருகிறது.அச்சத்துடன் திரும்புகிறார்.ஏ கொரோனா என்றவாறு முகத்திலும,உடம்பிலும் பான்பராக்கை துப்பிவிட்டு பறந்து போகிறான் ஒருவன்.இது நடந்தது டெல்லி முகர்ஜி நகர்.புகழ்பெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவ,மாணவியர் தங்கியிருக்கும் பகுதி அது.அவர் கடந்த பல வருடங்களாக அங்கே தங்கியிருந்து படித்துவரும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே பகுதியில் அறைஎடுத்து தங்கியிருந்து படிக்கும் மற்றொரு மணிப்பூர் மாணவி ரிலயன்ஸ் மாலுக்கு போகிறார்.அங்கே ஏற்கனவே பொருள் வாங்கிக் கொண்டிருந்த மற்றொரு பெண்,இவரைப் பார்த்ததும் துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு நீ அருகில் வராதே எனக்கும் கொரோனா வந்துவிடும் என கத்துகிறார்.நானும் இந்தியர் தானே? ஏன் இப்படி கத்துகிறீர்கள் என பதிலுக்கு கேட்டு கொண்டிருக்கும் போதே கடை ஊழியர்கள் மேற்படி மணிப்பூர் மாணவியை கடையை விட்டு வெளியேற்றுகின்றனர்.
ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபிற அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா,மணிப்பூர், மிசோரம், நாகலாந்து,திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநில மாணவ,மாணவியர்கள் இது போன்ற
ஏராளமான துயரச்செய்திகளை தங்கல் வாட்ஸ்சப் குழுவில் பரிமாறிக் கொள்கின்றனர்.டெல்லியில் மட்டுமல்ல வடமாநிலங்கள் பலவற்றிலும் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.மும்பை நகரில் மிசோரம் மாணவி ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது,போக்குவரத்து காவலரால் நிறுத்தப்படுகிறார்.அவர் மட்டுமல்ல பலரும் இவ்வாறு நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சரியாக இருந்தால் அனுப்பப்படுகிறார்கள்.ஆனால் முகத்தை மறைத்திருந்த துப்பட்டாவை நீக்கியவாறே ஆவணங்களை கொடுத்த மிசோரம் மாணவி நீண்ட நேரமாகியும் அனுப்பப்படவில்லை.ஆவணங்கள் சரியாகத்தானே உள்ளது ஏன் என்னை நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த பதில்,அவர்கள் இந்தியர்கள் உன்னைப் போல் கொரோனா பரப்ப மாட்டார்கள்.
பன்னிரெண்டு வருடமாக அகமதாபாத்தில் குடியிருக்கும் நாகலாந்து குடும்பம் ஒன்று சக குடியிருப்பு வாசிகளால் வெளியேற்றப்படுகிறது.
கொல்கத்தா நகரத்திலும் ஒரு குடும்பம் இவ்வாறு துரத்தப்படுகிறது.கொல்கத்தா வீதியில் ஒரு இளைஞனின்" டி சர்ட்" வாசகம் இவ்வாறு இருந்தது.
நான் கொரோனா வைரஸ் இல்லை.நான் கொல்கத்தாவில் பிறந்தவன்.சீனா சென்றது கூட இல்லை.சாதாரண குடிமக்களுக்கு மட்டுமல்ல, பிரபலமானவர்களுக்கும் இவ்வாறே நேர்கிறது. இந்தி திரையுலகின் பிரசித்தி பெற்ற பாடகர் மெயில் சாங் மும்பையில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த போது கொரோனா என திரும்ப திரும்ப அழைத்து அவமதிக்கப்பட்டார். ஒரு ஆட்டோவை நிறுத்தினால் கூட அதன் ஓட்டுநர் ஏற இறங்க பார்க்கிறார்.நாங்கள் இரட்டை பிரச்சினையை சந்திக்கிறோம்.ஒன்று கொரோனா வைரஸ் மற்றொன்று சமூக பாகுபாடு என்கிற வைரஸ் என்கிறார்கள் ஏழு சகோதரிகளின் மக்கள்.எங்கள் மீதான ஒவ்வாமையும்,பாகுபாடும் இப்போது துவங்கியதல்ல,எப்போதுமே இருப்பது தான்.அதை வெளிப்படுத்த கொரோனா ஒரு வாய்ப்பாகி விட்டது என்கிறார் மும்பை மருத்துவத்துறையில் பணியாற்றும் வடகிழக்கு மாநில சகோதரி மெர்ஸி தைம் நைத்தல்.
கொரோனா என அழைத்து பான்பராக்கை துப்பினானே,அவனுக்கு ஒரு வேளை கொரோனா இருந்தால் நான் என்ன ஆவது.பட்டியலினத்தவர்களைப் பாதுகாக்க ஒரு சட்டம் இருக்கிறது.எங்களுக்கு அதுவும் இல்லை என்கிறார் நமது மணிப்பூர் சகோதரி.பன்முகம் தானே நமது பெருமை.இவர்கள் ஏன் இவ்வாறு எங்களை சிறுமைப்படுத்துகிறார்கள்
என்கிற அவர்களின் கேள்விக்கு என்ன விடையளிக்கப் போகிறோம்.
உயிரை பறிக்கும் கொரோனா அச்சத்திலும்,பாகுபாடுகள் மட்டும் பாதிக்கப்படுவதே இல்லை.