தூத்துக்குடி:
தெய்வச்செயல்புரம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்க முயற்சிசெய்யும் நில மோசடி கும்பல், சிபிஎம் தலைவர்களை தாக்கியதோடு தங்கள் மீது போடப்பட்டூள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் விடுத்துள்ளஅறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம் கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு சொந்தமான 915 ஏக்கர் நிலத்தினை நில மோசடி கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்தனர். கிராமவிவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுவை அணுகி உதவி செய்யகேட்டுக் கொண்டனர்.
அதனடிப்படையில் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலாளரும், தற்போதைய மாநிலச் செயற்குழு உறுப்பினருமான க.கனகராஜ் தலையீடு செய்து நில மோசடி கும்பல்கள் விவசாய நிலங்களை அபகரிக்க விடாமல் விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டங்கள் நடத்தியதுடன், அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், நேரடியாக சந்தித்தும் முறையிட்டார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத நில மோசடி கும்பல், கட்சியின் தலைவர்களை 06.01.2012 தாக்கினர். இத்தாக்குதலில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சொ.மாரியப்பன் கொடூரமாக தாக்கப்பட்டு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். மேலும் கட்சித் தலைவர்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்யநில மோசடி கும்பல் ஏற்பாடு செய்தனர்.
மேலும் 06.01.2012 இரவு சமூக விரோதிகளுடன் நில மோசடிகும்பல் கூட்டு சேர்ந்து கொண்டுக.கனகராஜ் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது மனைவி தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் சிபிஎம் தலைவர்களை தாக்கிய நில மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்திடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், கட்சியின் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் விரிவான பதிலுரைகள் தயாரித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை உயர்நீதிமன்றம் 09.10.2020 அன்று நில மோசடி கும்பல் தாக்கல் செய்த மனுவைதள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் கட்சித் தலைவர்களை தாக்கிய நில மோசடி கும்பல் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் 06.01.2012 அன்று போடப்பட்ட வழக்கில் நான்கு வார காலத்திற்குள் இறுதிஅறிக்கை தாக்கல் செய்து முறையாக விசாரணை நடத்த வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவை கட்சியின் மாவட்டக்குழு வரவேற்கிறது. உயர்நீதிமன்ற வழக்கில் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் வழக்கறிஞர்கள் எல்.ஷாஜிசெல்லன், இ.சுப்புமுத்துராமலிங்கம், டி.சீனிவாசராகவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.