tamilnadu

திருவள்ளூர் முக்கிய செய்திகள்

பள்ளியை சீரமைக்க கோரி 6 வயது மாணவி  வழக்கு
பொன்னேரி, அக்.1-மீஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன். வழக்கறிஞராக உள்ளார். இவரது மகள் அதிகை முத்தரசி (6). இவர் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி அதிகை முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- நான் படிக்கும் தொடக்கப் பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருக்கிறது. சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் ஆக்கிர மிப்பு மற்றும் சமூக விரோத செயலால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது.  எனவே பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்கவும், வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்களை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசாயி ஆகி யோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “மாணவி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு திருவள்ளூர் ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலர் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராகி வருகிற 16 ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்குவை ஒழிக்க 29 குழுக்கள் அமைப்பு  ஆட்சியர் மகேஸ்வரி தகவல்
திருவள்ளூர்,அக்.1- திருவள்ளூர் நகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘ திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 1 மாநகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் ரத்னா தலைமையில் 29 குழுக்கள் அமைத்து மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது’ என்றார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தயாளன், துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், வட்டாட்சியர் பாண்டியராஜன், நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ராமகிருஷ்ணன், வெயில் முத்து மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.