tamilnadu

தமுஎகச நடத்தும் திரைப்பட விழா திருவண்ணாமலையில் 5 நாட்கள் நடக்கிறது

திருவண்ணாமலை, அக்.3- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்தும் 6வது உலக திரைப்படவிழா திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் 2019 அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தசாமி இந்த திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார். திரைப்படக் கலைஞர் ரோகிணி, இயக்குனர்கள் ராஜூமுருகன், கோபிநயினார், லெனின் பாரதி, பிரம்மா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும், எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா,தேவேந்திரபூபதி, ஷாஜி, உமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். 5 நாட்கள், 12 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்ப டுகிறது. இதற்கான வரவேற்பு குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. வரவேற்பு குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கவிஞர் ஆரிசன் தலைமை தாங்கினார். தமுஎகச வின் திரை இயக்க ஒருங்கிணைப்பாளர், கலப்பிரன் கலந்து கொண்டு உலக திரைப்பட விழாவின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பேசினார்.  மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, சந்துரு, இலியாஸ் சர்க்கார், சாமிநாதன், நாடகவியலாளர் சந்திரமோகன், சி.சுப்பிரமணியன், டாக்டர்  தேவ் ஆனந்த், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், ப.செல்வன் உள்ளிட்ட, திருவண்ணாமலை நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  இந்த வரவேற்பு குழுவிற்கு தலைவராக எஸ் .குழந்தைவேலு, செயலாளராக பாலாஜி, பொருளாளராக அ. செந்தில்குமார் மற்றும் 55 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.