திருவண்ணாமலை, செப். 11- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவனம் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்று, தொகுப்பு வீடு, நலவாரிய அட்டை வழங்க வேண்டும், நீர் நிலை புறம் போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் இரா.சரவணன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், நிர்வாகிகள் ஜா.வே.சிவராமன், பெ.அரிதாசு, ந.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை வந்த வந்தவாசி வட்டாட்சியர், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஏரி ஆக்கிரமிப்பை ஒரு வாரத்தில் அகற்றி மரக்கன்றுகள் நடுவதாக உறுதியளித்தனர். சம்பவ இடத்திலேயே 76 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும் 207 பேருக்கு சாதிச் சான்றும் 5 கிராம இருளர் இன மக்களுக்கு பழங்குடி நலவாரிய அட்டைகளையும் வழங்கினர்.