திருப்பூர் , ஏப்.25-
காங்கேயம் அருகே உயர்மின் கோபுர திட்டத்தால் உரிய இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், இராமபட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75) . விவசாயியான அவரது நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், சனியன்று மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னதாக , அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் ராசிபாளையம்-பாலமேடு வரையிலான 400 கே.வி. உயர்மின் அழுத்த மின் கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்த நிலையில், அந்த விவசாயிடம் ஆசை வார்த்தை சொல்லி, ஏமாற்றி, உயர்மின் கோபுரத்தை அமைத்து விட்டார்கள். ஆனால் அவர் கோரியபடி உரிய இழப்பீடு வழங்காததால் கடந்த 2 மாதமாக மேற்படி ராமசாமி மனமுடைந்து புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து சனியன்று இனிமேல் தமக்கு ஏதும் இழப்பீடு வராது என்று எண்ணி அவரு தோட்டத்து பூமியிலே உள்ள புதிதாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடு
உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடத்தில் தமிழக அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, உயர்ந்தபட்ச இழப்பீடு, வாழ்வாதார பாதிப்புக்கான நிவாரணம், மாற்றுப்பாதையில் செயல்படுத்துகிற திட்டத்தை பரிசீலிக்காத நிலைமை இவர்களைப் பற்றி யோசிக்காமல் காவல்துறை துணைகொண்டு திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதன் காரணமாக விவசாயிகளிடத்தில் பதற்றம் ஏற்பட்டு இப்படிப்பட்ட துர்பாக்கிய சம்பவங்கள் நிகழ்கிறது. பல விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது காவல்துறை இவரது மரணத்தையடுத்து குடும்பத்தினரை மிரட்டி உண்மை காரணத்தை மறைத்து புகார் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
ஆகவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு, அவரது மரணத்தை உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,திருப்பூர் மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது. மேலும்,
விவசாயி ராமசாமி அவர்களின் மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் .ஆர். மதுசூதனன், மாவட்ட செயலாளர்
ஆர்.குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.