திருவாரூர் செப்.15- “எனது வேலை எங்கே” என்ற தமிழகம் தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் புதிய இரயில் நிலைய சந்திப்பு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் எஸ்.முகமது சலாவுதீன் தலைமையேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.பாலா பங்கேற்று விளக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட பொருளாளர் எஸ்.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எச்.சுந்தரய்யா மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நகராட்சி அலுவலகத்திலிருந்து வாலிபர்கள் புதிய இரயில்நிலைய சந்திப்பிற்கு பேரணியாக சென்றனர்.
கோரிக்கைகள்
மத்திய மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களில் படித்த இளைஞர்களை பணி அமர்த்த வேண்டும். மத்திய அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை கைவிட வேண்டும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் அரசாணை 56 –ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.