tamilnadu

திருச்சிராப்பள்ளி ,நாகப்பட்டினம்,நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

திருச்சி அரசு சித்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை

திருச்சிராப்பள்ளி, மே 21-திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 3 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாள்பட்ட தீராத நோய் களுக்கு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களை கொண்டு ஆயுஷ்கிளப் செயல்பட்டு வருகிறது.இந்த ஆயுஷ்கிளப் மூலம் சர்க்கரை நோய், மூட்டுவலி, தோல்நோய், உடல்பருமன், கர்ப்பப்பை கட்டி, முகப்பரு, ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என திருச்சி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


அரசு மதுக்கடையில் போலிக் குடிநீர் விற்பனை

நாகப்பட்டினம், மே 21 -நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும்‘பார்’ இணைந்த அரசு மதுக் கடையில் தரமற்ற, சீலிடப்படாத,பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் சார் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், நாகப்பட்டினம் நகராட்சிஉணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகனை மதுக்கடையில் விசாரணை மேற்கொண்டார்.அங்கு ஒரு நிறுவனத்தின் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அதில்உணவுப் பாதுகாப்புத்துறை உரிம எண் உள்ளிட்ட தயாரிப்பு விவரங்கள் இருந்தன. அதேநேரம் சில பாட்டில்கள் உரியசீல் இல்லாமல் இருந்தன. இதுகுறித்து விசாரணை செய்தபோது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாட்டில்களில், கேன்களில் உள்ள குடிநீரைப் பிடித்து வைத்து, அவசரத்திற்கு இலவசமாக வாடிக்கையாளருக்கு வழங்குவதாகத் தெரிவித்தனர். ஆனால், அந்தக் குடிநீர் விற்பனைதான் செய்யப்பட்டது என அறியப்பட்டது.அவை அனைத்தும், உடனே கைப்பற்றப்பட்டு, குப்பையில் கொட்டி போடப்பட்டன. எந்தச் சூழலிலும் சீல் இல்லாமல் தாங்களே தண்ணீர் பிடித்து வைத்துக் குடிநீர் விற்பனைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது எனஉணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் எச்சரித் தார்.


அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வடநாட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை

நாகர்கோவில், மே.21-கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சைபெற்று வருகின்றனர்.இம்மருத்துவமனையில் திங்களன்று வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் பிரசவசத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக உறவினர்கள் சிலரும் தங்கியிருந்தனர். இதில் 10 வயது சிறுமி ஒருவரும் தங்கியிருந்து உள்ளார்.இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலை 2 மணிக்கு சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி ஒருவர், அந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதை கண்ட சிறுமியின் உறவினர் கூச்சலிட்டதை அடுத்து,மற்ற பணியாளர்கள் என அனைவரும் ஓடி வந்தனர். இதையறிந்த காவலாளி அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அலுவலர் குமுதா தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நேரில் விசாரித்தனர்.சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவலாளிநேசமணி நகர் பகுதியை சேர்ந்த சுபின் (24) என்பது முதல்கட்டவிசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஆசாரிபள்ளம் காவல் துறையினர் விசாரித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தில்அவரை கைதுசெய்தனர்.


ிஷம் குடித்து ஒருவர் தற்கொலை


தூத்துக்குடி, மே 21-தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், மனைவி ராஜலெட்சுமி (32). இந்த தம்பதியருக்கு2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடுகாரணமாக மாயகிருஷ்ணன் தனது மனைவியை பிரிந்துசென்றுவிட்டாராம். இதனால் ராஜலெட்சுமி தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். வறுமையில் தவித்துவந்த அவர் திங்களன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.