திருவாரூர் மே 31-திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேதாந்த குழுமம் மற்றும் ஓஎன்ஜீசி பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநில அரசின் உதவியுடன் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதனை எதிர்த்து மாவட்டம் முழுவதும் வரும் மாதம் 6,7,8 ஆகிய மூன்று தினங்கள் இருச்சக்கர வாகனம் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுகுறித்து விவாதிக்க சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமையில் திருவாரூரில் வியாழக்கிழமையன்று மாலை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத்தலைவர் வி.சுப்ரமணியன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்டது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜூன் மாதம் 26, 26 ஆகிய தேதிகளில் குடவாசலில் மண்டல அளவிலான விவசாய சங்க வகுப்பு நடைபெறவுள்ளது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விவசாய சங்கத்தலைவர்கள் பி.சண்முகம், டி.ரவிந்திரன், நீர் மேலாண்மை வல்லுநர் பேராசிரியர் ஞனகராஜன், இயற்கை வேளாண்மை ஆர்வலர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 9 மாவட்டங்களிலிருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பன்கேற்கவுள்ள இந்த வகுப்பினை சிறப்பாக நடத்திடுவதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அறிவிக்கப்படாத மின்தடை
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் வி.எஸ்.கலியபெருமாள் பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் அவசர கதியில் தூர்வாரும் பணி நடைபெறுவதால் விவசாயத்திற்கு பயனில்லாமல் நீர்வளம் வீணடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இவ்வாறு இல்லாமல் வாய்கால், வடிகால் போன்றவற்றை சீரமைத்து குடிமராமத்து பணியினை செம்மையாக மேற்கொள்ள வேண்டும். அறிவிக்கப்படாத மின் வெட்டின் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி மற்றும் நெல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைப்பதில் தடைபட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையும் மேலோங்கியுள்ளது. இவற்றை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றதுடன் நீடாமங்கலத்தில் பருத்தி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் நீடாமங்கலம் வட்டம் காலாச்சேரி ஊராட்சி, வெள்ளாம்பூவனூர் கிராமத்தில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இயக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தினார்.
நன்னிலம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் குறித்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றிய கட்சியின் இடைக்கமிட்டி மற்றும் கிளைச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கே.ஏ.எம். லிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் தியாக ரஜினிகாந்த் முன்னிலை வகித்தனர்.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாநிலக் கமிட்டி முடிவுகளையும், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்யக் கோரியும், இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜூன் 5-ம் முதல் 10-ம் தேதி வரை இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற உள்ளது. அதில் 8, 9-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பொதுமக்களின் துணையோடு மாபெரும் எழுச்சி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தை தொடர்ந்து கிளைச் செயலாளர்கள் மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் 8, 9-ம் தேதிகிளில் நடைபெறக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்களை திரளாக பங்கேற்கச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.