tamilnadu

தஞ்சாவூர் ,சீர்காழி ,புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் செப்.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றிய அளவிலான தூய்மைக் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மாவட்ட பொது சுகாதாரத்துறை, பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இணைந்து நடத்திய முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் எஸ்.சடையப்பன்(வ.ஊ), கோ.செல்வம் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மருத்துவ அலுவலர்கள் ரஞ்சித், வெங்கடேசன், ரிஸ்வானா பேகம், தீபா, கோகிலா, அம்சவாணி, கண் மருத்துவ நுட்பநர் ஆர்.திரவியம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், மருந்தாளுநர் சரவணன், ஊராட்சி ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர். 119 தூய்மைக் காவலர்களுக்கு இசிஜி, ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை வழங்கப்பட்டது.  

அரசுப் பள்ளிக்கு  கல்வி உபகரணம் வழங்கல்

தஞ்சாவூர் செப்.13- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி கிளை சார்பில் செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, வியாழக்கிழமை தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டி.என்.டி.ஜே.கிளைத்தலைவர் பஷீர் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.கணேசன் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் 16 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக எல்இடி தொலைக்காட்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்க உரையாக “இஸ்லாம் கூறும் பிறர் நலம் நடுதல்” என்ற தலைப்பில் ஆவணம் ரியாஸ் உரை நிகழ்த்தினார். தலைமையாசிரியருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. பேராவூரணி ஹாஜா, எம்.சாகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துளிர் வாசகர் திருவிழா

தஞ்சாவூர் செப்.13- தஞ்சாவூர் திருமகள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ஆர்.சுமதி தலைமை வகித்தார். மேம்பாலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநில பொறுப்பாளர்கள் முனைவர் வெ.சுகுமாரன், ஸ்டீபன்நாதன், பாலகிருஷ்ணன்,  மாவட்ட செயலாளர் லெ.முருகன், பொருளாளர் ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அருணாதேவி கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் தினேஷ், சுகுமாரன், மாணவிகள் மதுமிருதுளா மற்றும் ரம்யா உள்ளிட்ட 15 மாணவர்கள் துளிர் பற்றிய கருத்துகளை கூறினர். நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு, அறிவியல் இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக அறிவியல் இயக்கத்தின் திருமகள் பள்ளி கிளைச் செயலாளர் கமலா நன்றி கூறினார்.

இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு திடீர் தடை  

சீர்காழி, செப்.13- நாகை மாவட்டம் கொள்ளிடம் அக்கரகாரத்தெருவில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற தலைப்பில் மாங்கணாம்பட்டு கிராமம் தேசிய தவ்கீத் கூட்டமைப்பு சார்பில் வரும் 14-ந் தேதி கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கொள்ளிடம், தைக்கால், மாங்கணாம்பட்டு பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கொள்ளிடம் காவல்துறையினர், இந்நிகழ்ச்சிக்கு தடை விதித்தனர். 

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூர், செப்.13- கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 27-ம் தேதி காலை 10 முதல் மாலை 4 வரை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வெண்ணைமலையில் நடைபெறவுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 1000-க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசிஸ்ட், பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். றறற.nஉளதழடிகயசை.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04324- 223555 தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

தஞ்சாவூர், செப்.13-  தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(42). இவர் தஞ்சாவூர் கலால் துறையில் வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சாவூர் வட்டாட்சியராக பணியாற்றினார். இவர் வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமணத்துக்காகக் குடும்பத்துடன் சென்றார். மீண்டும் மதியம் 3.15 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 பவுன் நகை, 70 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரில் மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லி– திசை எட்டும் நடத்திய  மொழியாக்க போட்டி முடிவுகள் 

புதுக்கோட்டை, செப்.13-  நல்லி- திசை எட்டும் மொழியாக்க காலாண்டிதழ் நடத்திய மாணவர்களுக்கான மொழியாக்க போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டி முடிவுகள் குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் தங்கம் மூர்த்தி, பேரா.சா.விஸ்வநாதன், காசாவயல்கண்ணன் ஆகியோர் அறிவித்துள்ள விபரம்:  பள்ளி மாணவர்களுக்கு தமிழிலிருந்து ஆங்கிலம் பிரிவில் த.அனிஷா மௌன்ட்சியோன் சிபிஎஸ்சி முதல் பரிசும், வெ.சங்கர நாராயணன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசும் ஜா.சபனா பானு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சந்தைப்பேட்டை மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.  ஆங்கிலத்திலிருந்து  தமிழில் பிரிவில் ந.பரத்குமார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி முதல் பரிசும், க.பவித்ரா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சந்தைப்பேட்டை இரண்டாம் பரிசும், மு.சுமிதா அன்னை மெட்ரிக்.பள்ளி நச்சாந்துப்பட்டி  மூன்றாம் பரிசும் பெற்றனர். கல்லூரி மாணவர்களுக்கான தமிழிலிருந்து ஆங்கிலம் பிரிவில் க.செல்விஷோபாஸ்ரீ நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி முதல் பரிசையும், க.சனோபர் பாத்திமா ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் பரிசையும், அ.வைரபாரதி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  ஆங்கிலத்திலிருந் தமிழ் பிரிவில் சே.பரணிகா நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி அறந்தாங்கி முதல் பரிசும், அ.நௌபியா ஆப்ரின் அரசு மகளிர் கலைக்கல்லூரி புதுக்கோட்டை இரண்டாம் பரிசும், ஜெ. தீபிகா நைனா முகமது கலைஅறிவியல் கல்லூரி மூன்றாம் பரிசையும் பெற்றனர். பொதுப்பிரிவில் தமிழிலிருந்து ஆங்கிலம் பிரிவில் ஆ.மணிமொழி பட்டதாரி ஆசிரியை முதல் பரிசும், ம.லெட்சுமணன் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் இரண்டாம் பரிசும், சு.பவானி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி ஆசிரியை மூன்றாம் பரிசையும பெற்றனர். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மீ.சியாமளி முதுகலை பட்டதாரி ஆசிரியை முதல் பரிசும், ம.லெட்சுமணன் இரண்டாம் பரிசும், ஆர்.ராஜநாராயணன் பட்டதாரி ஆசிரியர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.  விருதுபெறும் அனைவருக்கும் செப்.30 அன்று புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் நிகழும் விழாவில் புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார், திசை எட்டும் இதழாசிரியர் குறிஞ்சிவேலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் விழாவில பரிசுபெற்றோருக்கு ரொக்கப் பரிசும், விருதுக்கேடயமும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.