பள்ளியில் நாணயக் கண்காட்சி
தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நாணயக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தலைமை ஆசிரியர் லதாஸ்வரி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 1 பைசா, 2 பைசா, 5 பைசாவில் 1380 நாணயங்கள், 10 பைசாவில் 4115, 20 பைசாவில் 11,500 நாணயங்கள் மற்றும் பழமையான இந்தியப் பணம், அரசர்கள் காலத்து நாணயங்கள், வெளிநாட்டு கரன்சிகள், பழங்காலக் கலைப் பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றன. இவற்றை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இதுகுறித்து நாணயக் கண்காட்சி நடத்திய காசு.கதிரேசன் கூறுகையில், கடந்த 10 வருடமாகப் பழங்கால நாணயங்கள், கலைப்பொருட்கள் சேகரித்து வருகிறேன். இவற்றைக் காட்சிப்படுத்தி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கண்காட்சியை நடத்தி வருகிறேன் என்றார். இவர் நடமாடும் தேநீர் விற்பனை செய்பவர். இவர், நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வமாக இருப்பதால் இவரைக் காசு.கதிரேசன் என்று அழைக்கின்றனர்.
சாலை விபத்தில் முதியவர் பலி
சீர்காழி, ஜூன் 30- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாணிக்கவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(60), விவசாயத் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாணிக்கவாசல் கிராம மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது அழகியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்துக் கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டா் சட்டத்தில் ஒருவர் கைது
சீர்காழி, ஜூன் 30- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பரவன்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலையா மகன் கார்த்திக்(32). இவர் மீது கொலை உள்படப் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட எஸ்.பி., பரிந்துரையின் பேரிலும், ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரிலும் குண்டா் சட்டத்தின் கீழ்க் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
தரங்கம்பாடி பகுதி கடைகளில் தடையை மீறிப் புகையிலை பொருட்கள் விற்பனை
தரங்கம்பாடி, ஜூன் 30- தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கடைகளில் தடையை மீறிப் புகையிலை பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார், திருக்கடையூர், ஆக்கூர், பெரம்பூர் பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் புகையிலை கலந்த பாக்குகளை அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். புற்றுநோய், இருத நோய், தோல் சம்பந்தமான நோய்கள் வருவதற்குக் காரணமான புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்யப்படுவதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மே மாதம் முதல் ஊதியம் வழங்கவில்லை சீர்காழி பள்ளி ஆசிரியர்கள் அவதி
சீர்காழி, ஜூன் 30- நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து அரசு உதவி பெறும் கே.ஏ.எம். உயர்நிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வலியுறுத்தியும், கடந்த மே மாதம் முதல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்களுடைய குடும்பச் செலவிற்கும் பிள்ளைகளுடைய கல்வி செலவிற்கும் உள்ளிட்ட அடிப்படை செலவுக்காக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சம்பந்தபட்ட கல்வித்துறை நிர்வாகம், ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 65 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 30 மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 90 சதவீத மாணவர்கள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அப்பள்ளி எதையும் கண்டுகொள்ளவில்லை என்று அப்பகுதி பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் அப்பகுதி மக்கள், பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்துத் தரக் கோரிக்கை
தஞ்சாவூர், ஜூன் 30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மல்லிப்பட்டினத்தில் துறைமுகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் படகுகளைக் கட்டி வைக்கும் பொழுது அலையின் வேகத்தால் ஒன்றோடொன்று மோதி உடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் துரிதமாக உடன் தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும். பழைய மேலாண்மை குழுவினால் எந்தப் பதிலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே பழைய மேலாண்மை குழுவைக் கலைத்துவிட்டு, புதிய மேலாண்மை குழுவை மீனவர்கள் சங்கங்கள் வாயிலாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த கஜா புயலின்போது முற்றிலும் உடைந்து நொறுங்கிய படகுகளில் அரசு தந்த கம்பியில்லாத் தொலை தொடர்பு கருவியும் நொறுங்கிப் போய் விட்டது. எனவே அதைக் கணக்கில் கொண்டு, அரசு கூறிய புதுப்பித்தல் கட்டணத் தொகையை மீனவர்களின் மீது சுமத்தாமல் அரசே ஏற்று அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.