குளித்தலை, ஜூலை 5 - கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை துறையூர் நகராட்சி, மருதூர், முசிறி பேரூராட்சி மற்றும் வழியோர நூற்றுக்கணக்கான கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் சிறப்பாக நடைபெறவும் விவசாயம் காக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் தடுப்பணை கட்டக்கோரி குளித்தலை பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். குளித்தலை பகுதி பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் இணைந்து வியாழனன்று குளித்தலை நகரில் தடுப்பணை அமைக்க முதல் கட்ட கையெழுத்து வாங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராமர் ஆகியோரைச் சந்தித்து குளித்தலை நகரில் தடுப்பணை அமைக்க வலியுறுத்த உள்ளனர்.