tamilnadu

img

பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆசிரியரல்லா பணியாளர்கள் மனு

பெரம்பலூர், ஜூன் 22- கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் எம்எல்ஏ தமிழச்செல்வனிடம் வெள்ளியன்று அளித்த கோரிக்கை மனுவில், பெரம்பலூரில் கடந்த 2006-ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி துவக்கப்பட்டது. இதில் கல்வித் தகுதிக்கேற்ப பல்கலைக்கழகத்தால் தற்காலிகமாக 22 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு ஆசிரியரல்லா பணியாளர்களாக தொகுப்பூதியத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அரசு கலைக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. இதன்படி இக்கல்லூரி அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த அரசாணையில் பல்கலைக்கழகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் அரசு கல்லூரியில் புதிதாக அலுவலர்கள் நியமனம் செய்யப்படும் வரை பணிபுரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பல்கலைக்கழத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு இக்கல்லூரியில் பணிபுரியும் 22 ஆசிரியரல்லா பணியாளர்கள் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. தற்போது நாங்கள் அனைவரும் 40 வயதிற்கு மேல் கடந்தவர்களாகவும், திருமணமாகி குழந்தைகளுடன் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். எனவே எங்களின் அன்றாட வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி பணி நிரந்தரம் செய்ய ஆவணம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.