tamilnadu

img

தஞ்சை கடையில் நூதன முறையில் பணத்தைத் திருடிய வெளிநாட்டு தம்பதி கைது

தஞ்சாவூர்: தஞ்சையில் கடையில், நூதன முறையில் பணத்தைத் திருடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த தம்பதியரைக் காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர், கொடிமரத்து மூலையைச் சேர்ந்த பார்த்த சாரதி (62), அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்குக் கடந்த 16 ஆம் தேதி, வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதியினர், இந்தியா விற்குத் தாங்கள் புதியதாக வந்துள்ளதாகவும், இந்தியா நாட்டின் பணத்தின் மதிப்புகளைக்  கூற வேண்டும் எனப் பார்த்தசாரதியிடம் கேட்டுள்ளனர். அவரும், தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து 10,500 பணத்தை வாங்கிப் பார்ப்பது போல, திருடிச் சென்றனர்.  இது குறித்த புகாரில் தஞ்சை மேற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு, கடை வீதியில், வெளிநாட்டு தம்பதியினர், கடை  ஒன்றில் திருடிய போது, கடையின் உரிமையாளர் பிடித்துக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் செங்கல்பட்டு காவலர்கள் நடத்திய விசாரணையில், தஞ்சையில் திருடிய தும் இத்தம்பதிகள் தான் எனத் தெரிய வந்தது. இதையடுத்து வியாழக்கிழமை அவர்களைத் தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர்கள், ஈரான் நாடு தெகரான் பகுதியைச் சேர்ந்த அலிஜாபர் (57), அவரது மனைவி மர்ஜான்(46) என்பதும், ஈரான் நாட்டில் இருந்து தமிழகத்திற்குச் சுற்றுலா வருவது போல, தமிழகம் முழுவதும் பல்வேறு கடைகளில் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவ ரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.