tamilnadu

img

கஜா புயல் தாண்டவத்திற்கு பிறகு பறவையினங்களுக்கு அடைக்கலம் கொடுத்த சொச்ச மரங்களும் வெட்டி அழிப்பு

தஞ்சாவூர், மே 26-தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில், சங்கிலி குளம் அமைந்து ள்ளது. இதன் பரப்பளவு சுமார் 15 ஏக்கர் ஆகும். முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த குளத்தினை கடந்த 2 ஆண்டுகளாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரியதுடன், நீரையும் சேமித்து பராமரிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் கோர தாண்டவத்தில் செருவாவிடுதி பகுதியில் இருந்த பல்லாயிரம் ஆயிரம் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல ஆயிரம் பறவைகள் தங்களுக்கான வசிப்பிடங்களை இழந்தன. இதில் சங்கிலி குளத்தில் போதிய தண்ணீர் இருந்ததால் குளத்தில் இருந்த ஒரு பழமையான நாட்டுக் கருவேல மரத்தில் பல விதமான பறவையினங்கள் இரவு நேரங்களில் வந்து தங்கி செல்ல தொடங்கின.   இதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செருவாவிடுதி பகுதி நீர் நிலை ஆதாரங்களில் காய்ந்து போன மரங்களை வெட்டுவதற்காக பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செருவாவிடுதி பகுதி மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. சங்கிலி குளத்தில் இருந்த நாட்டு கருவேல மரம் உள்பட புயலுக்கு தப்பிய நல்ல நிலையில் இருந்த சொச்ச மரங்களும் வெட்டப்பட்டன. இதையறிந்த செருவாவிடுதி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி ராஜமாணிக்கம் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதில்  பொதுப்பணித்துறையினர் ஏலம் விடாத சங்கிலி குளம் உட்பட பல இடங்களில் காய்ந்து போகாமல் நல்ல நிலையில் உள்ள பல மரங்களையும் ஏலம் எடுத்தவர்கள் அனுமதியின்றி வெட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பேராவூரணி பொதுப்பணித்துறை சார்பிலும், செருவாவிடுதி கிராம மக்கள் சார்பிலும், திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்கம் போல தங்கள் வாழ்விடங்களுக்கு வந்த பறவைவைகள், மரங்கள் வெட்டப்பட்டு தங்களது கூடுகள் சிதைக்கப்பட்டு கிடந்ததை கண்டு கீச்சிட்டு குரல் எழுப்பியவாறு அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தன. பின்னர் சற்று நேரத்தில் பறவைகள் அங்கிருந்து வேறு இடம் தேடி ஏமாற்றத்துடன் பறந்து சென்றன. இது காண்போர் கண்களை உருக்கும் விதமாக இருந்தது.