tamilnadu

img

சிறுமி கும்பல் பாலியல் வன்கொலை வழக்கில் குற்றவாளி விடுவிப்பு... தீர்ப்புக்கு எதிராக முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்.... 3 லட்சம் சலூன் கடைகள் அடைப்பு

திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 12 வயது சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விடுவித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. 

இத்தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பப்பட்டியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16 அன்று அந்தக் கொடிய சம்பவம் நடந்தது. முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த கிருபானந்தம் என்பவரும் அவரது நண்பர்கள் டார்வின் சிங், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் சேர்ந்து அச்சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பின்னர் சிறுமியின் மூக்கில் மின் வயரை செலுத்தி படுகொலை செய்தனர்.

மாதர் சங்கம் தலையீடு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வந்தது. மாதர் சங்க போராட்டத்தின் விளைவாக வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் கிருபானந்தத்தை மட்டும் குற்றவாளியாக சேர்த்து மற்ற இருவரையும் விடுவித்தனர். இதற்கும் மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணைகளில் “நான் தான் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தேன்” என்று சம்பந்தப்பட்ட குற்றவாளியான கிருபானந்தம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட அனைத்து சாட்சியங்களும் கிருபானந்தம், டார்வின் சிங், ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு  எதிராக உள்ளன. ஆனால் காவல்துறையும் நீதித்துறையும் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. இந்நிலையில் 2020 அக்டோபர் 5 அன்று திண்டுக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி குற்றவாளி கிருபானந்தத்தை விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பு, குழந்தையை பறிகொடுத்த பெற்றோர், உறவினர்கள்  மற்றும்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பு வழங்கிய உடனே நீதிமன்றம் முன்பாகவே மாதர் சங்க தலைவர்களும் குழந்தையின் உறவினர்களும் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வரை போராடுவோம் என்றும் அறிவித்தனர்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்புப் போராட்டம்
இந்நிலையில், வடமதுரை சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் குற்றவாளியை நீதிமன்றம் பகிரங்கமாக விடுவித்ததை எதிர்த்தும், இவ்வழக்கில் அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் அக்டோபர் 9 (வெள்ளியன்று) கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் தலைமையில் சுமார் 3 லட்சம் முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.முனுசாமி, மாநிலப் பொதுச் செயலாளர் பி.செல்வராஜ், பொருளாளர் டி.கே.ராஜா ஆகியோர், இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அதுவரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் இவ்வழக்கில் துணை நிற்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.

கே.பாலபாரதி பேட்டி
இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, “இந்த வழக்கில் நான் தான் பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்தேன் என்று குற்றவாளி கிருபானந்தம் இரண்டு முறை குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கையும், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதை உறுதி செய்கிறது. ஆனாலும் கூட திண்டுக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளியை விடுவித்து அளித்த தீர்ப்பு வேதனை அளிக்கிறது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். முடிதிருத்தும் ஏழைத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை மாதர் சங்கம் போராடும், அந்த குடும்பத்திற்கு துணை நிற்கும்” என்று தெரிவித்தார்.