கன்னிவாடி அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட மூவர் பலியாகினர் உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி பிரிவில் செம்பட்டி ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். காரை கேரள மாநிலம் கரமணையை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒட்டி வந்தார். காரில் அபிஜித் என்பவரது குடும்பத்தை சேர்ந்த அனீஸ், தேவன், அபிஜித், அபிலாஷ், அனுபு, சைலஜா, சங்கீதா, ஜெயா குழந்தைள் ஆரவ் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட 11 பேர் வந்துள்ளனர்.
கார் கன்னிவாடியை அடுத்த பண்ணைப்பட்டி அருகே வரும் பொழுது காரின் டயர் வெடித்ததில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரை தாண்டி வலது புறம் எதிர் திசையில் சென்று எதிரே பழனியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் சென்ற இருவர் சைலஜா என்ற பெண்ணும் 5வயது ஆரவ் என்ற ஆண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொரு 6-வயது குழந்தை சித்தார்த் உயிரிழந்தார்.
மேலும் 6-பேர் பேர் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உதவியுடன் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையிலும், ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் 3-பேரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கருப்புத்துரை, நடத்துனர் பாண்டியராஜா இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும், கன்னிவாடி, ஒட்டன்சத்திரம் மற்றும் செம்பட்டி இன்ஸ்பெக்டர்கள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் ஒட்டன்சத்திரம் செம்பட்டி சாலையில் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.