காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக ஜுன்12ல் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த 2012க்கு பிறகு இந்த ஆண்டோடு 8வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. ஆற்றுப்பாசனத்தை நம்பி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறும்.ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் 8வது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடியை இழந்துள்ளனர்.ஆழ்குழாய் பாசனம் மூலம் நடைபெறும் குறுவை சாகுபடியும் இந்த ஆண்டு கணிச மாக குறைவதற்கான வாய்ப்பு தான் அதிக மாக உள்ளது. கடும் வெயிலால் நிலத்தடி நீர் மட்டம் 150 அடி முதல் 200 அடிக்கு கீழ் சென்றுள்ளது. மும்முனை மின்சாரமும் முறையாக வழங்கப்படாததால் பம்பு செட்மூலம் நடைபெறும் சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.
கஜா புயல் தாக்குதலால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பகுதியாக மரங்கள் விழுந்துவிட்ட சூழலில் வறண்ட அனல் காற்று அதிகமாக வீசும் பகுதியாக இம்மாவட்டங்கள் மாறியுள்ளன. கோடையில் தமிழகத்தில் பல பகுதிகளில் பெய்த மழை இப்பகுதியில் பெயரளவிற்குக் கூட எட்டிப்பார்க்கவில்லை. இந்த சூழலில் மேட்டூர்அணையில் (ஜுன் 1 நிலவரப்படி) 46.4 அடியாக (15 டி.எம்.சி) மட்டுமே உள்ள நிலையில் குறுவை சாகுபடி சாத்தியமில்லை என தமிழக பொதுப்பணித்துறை அதி காரிகள் அறிவித்துள்ளனர். இயல்பாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வேண்டுமானால் அணையில் நீர் இருப்பு 90 அடி இருக்க வேண்டும். (65 டி.எம்.சி) அணைக்கான நீர் வரத்து 8000 கனஅடியிலிருந்து 15000 கன அடி வந்து கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் கடைமடை வரை தண்ணீர் சென்று குறுவை சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் நடப்பாண்டில் இல்லை.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை இவ்வாண்டு சற்று காலதாமதமாக துவங்குமென்றும், இயல்பாக இருக்கு மென்றும் மாறி மாறி ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் காலத்தோடு இயல்பான மழை அளவோடு தென்மேற்கு பருவமழை துவங்கினாலும் கர்நாடகத்தில் உள்ள அணைகள் முழுவதும் நிரம்பிய பின்புதான் உபரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது என்ற நிலைபாட்டில் மாற்றமில்லாமல் உள்ளது கர்நாடக அரசு. ஏனென்றால் கடந்த 28.5.2019ல் நடைபெற்ற, உச்சநீதிமன்றத் தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. காவிரியில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டிற்கு கர்நாடகத்திடமிருந்து மாதவாரி யாக 177.25 டி.எம்.சி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். அதில் ஜுன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி தண்ணீரை உடன் கர்நாடகம் திறக்க வேண்டுமென உத்தரவிட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக அதிகாரிகள் எந்த எதிர்ப்பையும் அங்கு தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் முடியாது. ஏனெனில் இது சட்டரீதியானது, ஆனால் அடுத்த நாளே கர்நாடக நீர்ப்பாசனத்தை அமைச்சர் தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்கிறார். ஆணையத்தின் உத்தரவை கண்டித்து சில அமைப்புகள் போராட்டமும் நடத்தியுள்ளன.
எனவே, கர்நாடகத்தை பொறுத்தவரை காவிரி நதி நீர் பிரச்சனையில் எந்த தீர்ப்பானாலும், உத்தரவானாலும் நிறைவேற்ற அம்மாநில அரசு தயாராக இல்லை என்பது தான் கடந்த கால அனுபவம். ஆணையத்தை பொறுத்தவரை உத்தரவிடுவதோடு இல்லாமல் அதை செயல்படுத்தும் அதிகாரத்தையும் தனது கையில் எடுக்க வேண்டும். ஆனால், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவும், மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை இரண்டு அமைப்பிற்கான முழு நேர தலைவர் நியமிக்கப்படவில்லை. ஒழுங்காற்று குழுவிற்கான அலுவலகம் பெங்களூரில் அமைக்கப்படவில்லை. மேலும் ஆணையம் அமைக்கப்பட்டதி லிருந்து 2 முறை தான் கூட்டம் நடைபெற் றுள்ளது.
கடந்த நவம்பரிலிருந்து இந்த ஆண்டு மே இறுதி வரை தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரில் 19.5 டி.எம்.சி தண்ணீர் பாக்கியுள்ளது. இது பற்றியெல்லாம் ஆணைய கூட்டத்தில் முழுமை யாக விவாதிக்கப்படவில்லை. தமிழக அதிகாரிகளும் இப்பிரச்சனையை எழுப்ப வில்லை.மேலும் பருவ காலங்களில் ஆணையம் 10 நாட்களுக்கு ஒரு முறை கூடி தண்ணீர் திறப்பை உத்தரவாதப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளபடி இம்மாதத்திலிருந்து ஆணையம் செயல்பட வேண்டும். அப்போது தான் அடுத்த சாகுபடியையாவது தமிழக விவசாயிகள் நம்பிக்கையோடு செய்ய முடியும். இந்த ஆண்டோடு 8 ஆண்டுகளாக காவிரியில் உரிய முறையில் கர்நாடகம் தண்ணீர் திறக்காததாலும், பருவமழை கைக் கொடுக்காததாலும் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்துள் ளனர். இந்த நிலையே தொடர்ந்து நீடித்தால் குறுவை சாகுபடியே பொய்த்துப் போகும் நிலை தான் டெல்டாவில் ஏற்படும்.