குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக, மோடியின் பாஜக ஆட்சி கொள்ளை நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களை நிவாரணம் அளித்து கை தூக்கிவிடாமல், இக்காலத்தைப் பயன்படுத்தி வேலை நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிக்கும் சட்டத் திருத்ததிற்கு ஏற்பாடு செய்துள்ளது. முதலாளிகள் சந்தித்த சந்தை நெருக்கடிக்கு உதவ, பல லட்சம் கோடி ரூபாய் சலுகையை அறிவித்த பாஜக, கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஈடுகட்ட வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தும் நடவடிக்கை மூலம் கொள்ளை லாபத்திற்கு உதவும் செயலை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் போசாக்கான உணவின்றி வாழ்ந்து வரும் தொழிலாளியை ஒட்டச் சுரண்ட நினைக்கும், இந்த தொழிலாளர் விரோத வன்மத்திற்கு எதிராக, வீடுகளுக்கு முன் 10 நிமிடம் முழக்கமிட சி.ஐ.டியு அழைப்பு விடுத்துள்ளது.
தொழிலாளருக்கான வேலை நேரம்
உலகின் தொழிலாளர்கள் தங்களுக்கான வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடத் துவங்கிய போது, இந்தியாவில் ஆலைகள் பெரும் எண்ணிக்கையில் உருவாகி இருக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான் பஞ்சாலைகள் பம்பாய், சென்னை, கல்கத்தா பகுதிகளில் உருவாகி வளர்ச்சி பெற்றன. வேலைநேரம் சூரிய உதயம் துவங்கி மறையும் வரையானதாக தீர்மனிக்கப்பட்டது. பின் மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்த பின், வேலை நேரமும் அதிகரித்தது. எனவே வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற போராட்டமும் தவிர்க்க முடியாததாக மாறியது. அதாவது இந்தியாவில், குழந்தைகளையும், பெண்களையும் அதிக எண்ணிக்கையில், பஞ்சாலை உற்பத்தியில் நேரம் காலம் இல்லாமல் ஈடுபடுத்தியதால், இந்தியாவின் ஆலைகள், இங்கிலாந்தின் லங்காஷயர் ஆலைகளை விடவும் மலிவாக உற்பத்தி செய்து தர முடிந்தது.
அதேநேரம் வேலைநேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 1891 ல் தொழிற்சாலைகள் சட்டம் 12 வயதுக்கு கீழ் இருந்த சிறுவர்களின் உழைப்பு நேரத்தை 9 மணிநேரமாகவும், பெண்களுக்கான வேலை நேரத்தை 12 மணி நேரமாகவும், இரவு வேலை செய்வதில் இருந்து பெண்களுக்கு விலக்களிப்பது என்றும் திருத்தி சட்டம் இயற்றப்பட்டது. மற்ற ஆண் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் 14 அல்லது 16 மணி நேரமாக இருப்பது நீடிக்கும் என்றும் வரையறை செய்யப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நீடிக்கவே, 1908 ல் வேலைநேரம் குறித்து விசாரணை நடத்த மாரிசன் என்பவர் தலைமையில் ஒரு குழு லண்டலில் இருந்து வந்தது. அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பின்னணியிலேயே, 1911 ல் 12 மணி நேரம் வேலை நேரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1922 ல் தொழிலாளர்கள் வேலைநேரம் மற்றும் ஓய்வு, இடைவேளை ஆகியவை குறித்த பிரச்சனைகள் முன்னுக்கு வந்தது. சென்னையில் 1923 ல் இந்திய வரலாற்றில் முதல் முறையாக சிங்காரவேலர் மே தினக் கொடியேற்றினார். அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டிஷ் அரசு ராயல் கமிஷன் என்ற குழு மூலம் 1929 ல் விசாரணை நடத்தியது. அதன் பரிந்துரைப்படி, 1934 ல் வேலைநேரம் 9 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் ஜனநாயகக் குரலின் வலு ஆகியவை வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அதிகப்படுத்தியது. 1942 நவம்பர் 7 ல் அரசு நடத்திய, தொழிலாளர் மாநாட்டில், வேலைநேரத்தை 8 மணிநேரமாக குறைக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து அம்பேத்கர் பேசினார். “வேலைநேரத்தைக் குறைப்பது என்பது, வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதுடன், மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் செய்யும், அதேநேரத்தில் இக்கோரிக்கையை அரசு ஏற்கும் நிலையில், அவர்களின் அடிப்படை சம்பளத்தையோ, பஞ்சப்படியையோ குறைப்பது என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது”, என தெளிவாக அம்பேத்கர் அவர்கள் பேசியுள்ளார். இப்படி பல்வேறு நிர்பந்தங்களைத் தொடர்ந்தே, பிரிட்டிஷ் அரசு 8 மணி நேர வேலைக்கு ஒப்புக் கொண்டது. இந்தியாவில் 8 மணிநேர வேலை வாரம் 48 மணி நேரம் என்பது அமலாகத் துவங்கி 80 ஆண்டுகள் ஆகிறது.
7 மணி நேரமாக குறைப்பதே இன்றைய தேவை
இப்போது இந்திய பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். அல்லது வேலையின்றி உள்ளனர். இதன் எண்ணிக்கை உழைப்புச் சந்தையில் சுமார் 10 கோடிப் பேர். இவர்கள் கையிலும் வாங்கும் சக்தி ஏற்படும் போது தான், பொருளாதாரம் மேம்படும். உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இந்தச் சூழல் உருவாக வேலை நேரத்தை குறைப்பதே அவசியம்.
ஆனால் மத்திய பாஜக ஆட்சி, கொரோனா கால ஊரடங்கிற்கு, வாய்ச்சவடால் நிவாரணம் வழங்கியது போல், வேலைநேரத்தை 8 ல் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்து, ‘அதிக உற்பத்திக்கு’ அழைப்பு விடுத்துள்ளது. இது உற்பத்தி தேக்கத்திற்கே வழிவகுக்கும். அதாவது, உற்பத்தியை தூண்டும், ஆனால் குறைவான தொழிலாளர்களின் வருவாயை மட்டும் சற்று உயர்த்துவதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்காது. மாறாக வேலை நேரத்தை குறைப்பது, மூலதனக் குவிப்பை கட்டுப்படுத்தும்; பரவலான வருவாய் உயர்வுக்கு வழி வகுக்கும்.
கோவிட் 19 பாதிப்பு, ஊரடங்கு 1இன் போது 21 நாட்களும், ஊரடங்கு இரண்டின் போது 19 நாட்கள் என மொத்தமாக, 40 நாட்கள் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் வீட்டுக்குள் பூட்டி விட்டு, மறைமுகமாக, தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 51 ஐ, 12 மணிநேரமாக உயர்த்தும் வகையில் திருத்துகிறது. இத்தகைய திருத்தத்திற்காக, முன்மொழியப்பட்ட ‘தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைத்தன்மை 2019 மசோதா’, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இடம் பெற்றுள்ள எளமரம் கரீம், தனது திருத்தங்களை 7 பக்கங்களில் முன்மொழிந்துள்ளார். குறிப்பாக வேலை நேரத்தை வரையறை செய்துள்ள தற்போதைய பிரிவுகள் 51,54 ஆகியவற்றை திருத்தல் கூடாது; ஜப்பான் ஆய்வு சுட்டிக் காட்டியது போல், வேலை நேரத்தை குறைப்பதன் மூலம் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்பதையும் இணைத்து கூறியுள்ளார்.
பிற நாடுகளில்...
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு 16 வது அகில இந்திய மாநாடு, வேலை நேரத்தை ஒருநாளைக்கு 7 மணிநேரம் எனவும், வாரம் 35 மணிநேரமாகவும் குறைக்க வேண்டும். இதன் மூலம் வாரம் இருநாள்கள் விடுமுறை உருவாகும். அதேபோல் கணிசமான வேலையின்மையை இதன் மூலம் குறைக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக, வாரம் 35 அல்லது 36 மணிநேரம் என்ற தன்மையில் வேலை நேரத்தை வரையறை செய்து, பல பத்தாண்டுகளாக அமலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாரம் 40 மணிநேரம் என்பது 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையாகும்.
வரலாற்றில் இருந்தும், இந்திய ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும், உலகப் பொருளாதார பெருமந்தம், 1930 களில் உருவான போது, உலகப்போர் மூண்டது, போர் முடிவுக்கு வந்த போது, முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகள் பலவும் வேலைநேரத்தை குறைப்பது குறித்த அழுத்தத்திற்கு ஆளாகின. குறிப்பாக 1935, ஜூன்4 அன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) முன் மொழிந்த தீர்மானமான, வாரம் 40 மணி நேரமாக வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது, முக்கிய பங்களிப்பைச் செய்தது. பொருளாதார பெருமந்தத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான ஒன்று வேலையின்மை ஆகும். வேலை நேரத்தை குறைப்பதன் மூலம், வேலையின்மையை குறைக்க முடியும் பெருமந்தத்திற்கு தீர்வு காண முடியும், என்பதையும் தீர்மானம் தெளிவு படுத்துகிறது.
அதேபோல் 1962 ஜூனில், ஐ.எல்.ஓ மீண்டும் ஒரு தீர்மானத்தின் மூலம், மேலும் வேலை நேரத்தை ஒவ்வொரு நாடும் தற்போதைய நிலையில் இருந்து குறைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 2000 ல் இருந்து, பிரான்ஸ் வேலை நேரத்தை வாரத்திற்கு 35 மணி நேரமாக குறைத்தது. பல நாடுகள் இதை பின்பற்றின. ஆனால் இந்தியா, உலக வளர்ச்சியின் இந்தப் பாதையை இருட்டடிப்பு செய்கிறது. இடதுசாரி இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் இது குறித்து அவ்வப்போது வலியுறுத்துகின்றன. ஆனால் இது பெரும் ஜனநாயக எழுச்சிக்கான குரலாக மாறவில்லை. இப்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் ‘12 மணி’ வேலைநேர முயற்சியை எதிர்த்து அத்தகைய பெரும் குரல் எழுப்பப்படுவதும், வீச்சாக பரவுவதும் பற்றி எரிவதும் அவசியம். தொழிலாளர்களும், அவர் தம் குடும்பங்களும், வேலைக்காக போராடும் இளைஞர்களும் இந்த முழக்கத்தில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.