tamilnadu

img

மாற்று இடம் வழங்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலம், மே 20-மாற்று இடம் வழங்ககோரி அயோத்தியாபட்டணம் பகுதி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் பகுதியில் போயர் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 20 வருடகாலமாக குடியிருந்து வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அறநிலையத்துறையினர் குடியிருப்பவர்கள் அனைவரையும் உடனடியாககாலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் திங்களன்று அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாற்று இடம் வழங்க கோரியும்,அவர்களுக்கு தங்கியுள்ள இடத்திலேயேமாத வாடகைக்கு வீடுகள் வழங்கக்கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பணியில் இருந்தகாவல்துறையினர் அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி குறிப்பிட்ட நான்கு நபர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனுவை புகார் பெட்டியில் போடச் செய்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியதால் இந்த முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.