சென்னை, நவ. 9 - கவிஞர் தமிழ்ஒளியின் நூல்களை 1966க்கு பிறகு மறுவெளியீடு செய்து, அவை பரவலாக அறியப்பட காரணமாக செயல்பட்டவர் பதிப்பாளர் செ.து.சஞ்சீவி. அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். இவரின் மனைவி வசந்தா அம்மாள். சஞ்சீவியின் தமிழ்ஒளி சார்ந்த செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர் வசந்தா அம்மாள். சலவைத் தொழிலாளரான சஞ்சீவியை மணந்து கொண்டு போதுமான வருமானம் இல்லாத சூழலிலும் அனைத்தையும் தன் கனிவால் புன்னகை யால் கடந்து வந்தவர் வசந்தா அவர்கள்.
சஞ்சீவியின் சலவைக்கடையில் விருந்தினராக சிலகாலம் தங்கி வாழ்ந்தவர் தமிழ்ஒளி.அந்தக்காலங்களில் தமிழ்ஒளிக்கு உணவிட்டு பாதுகாத்தவர்கள் என சஞ்சீவி உடன் வசந்தாவையும் இணைத்துச் சொல்லலாம்.
தன் வீடு வரும் தோழர்கள் யாவருக்கும் உணவளித்து பசி போக்கியவர் வசந்தா அம்மாள்.செ.து.சஞ்சீவி கடந்த பத்தாண்டுகளாக நோயில் விழுந்த பொழுது தமிழ்ஒளியின் பணிகள் தடைபட்டு விடக்கூடாது என்ற அக்கறையிலும் தன் கணவரை கண்மணி போல பாதுகாத்து வந்தவர் வசந்தா அம்மாள். வசந்தா அம்மாள் தன் 81 ஆவது வயதில் புதனன்று சென்னை ஷெனாய்நகர் பிள்ளையார்கோவில் தெரு இல்லத்தில் தூக்கத்திலேயே உயிர் நீத்திருக்கிறார்.
வசந்தா அம்மாள் இறந்த செய்தி கேட்டு தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு செயலாளர் இரா.தெ.முத்து, பொருளாளர் வே.மணி, தமுஎகச மாநில துணைத்தலைவர் மயிலை பாலு, கல்வியாளர் பிரின்ஸ் கசேந்திரபாபு, கலை இலக்கிய பெருமன்ற சென்னை மாவட்ட செயலாளர் கணபதி இளங்கோ, புலவர் உதயை வீரையன், கவிஞர் நா.வே.அருள் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்
வசந்தா அம்மாள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், சிகரம் ச.செந்தில்நாதன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.