சிதம்பரம்,டிச.6- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சி. புதுப்பேட்டை மீனவ கிராமத்தின் கடற்கரையோரத்தில் வெள்ளியன்று(டிச.6) குளிரூட்டும் கண்டெய்னர் பாதி உடைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் பரங்கிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட உதவி ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இந்த கண்டெய்னர் கப்பலில் ஏற்றிச் செல்லும் போது கடலில் தவறி விழுந்ததா? இல்லை வேறு ஏதாவது சந்தேகப்படும் படியாக மர்மம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.