tamilnadu

img

அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் - பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணத்திற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் தமிழக ஆளுநர் செயல்படுவதாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டினார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு  செவ்வாயன்று செய்தியாளரை சந்தித்தார். 
அப்போது  கூறுகையில், 
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 30ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும், ஆளுநர் தொடர்ந்து செவிசாய்க்கவில்லை என்றால் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் நான்  ஈடுபட உள்ளேன்.
நீட் தேர்வு ரத்து குறித்து அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்வு ரத்து  தொடர்பாக வாக்குறுதிகளை அளித்தனர்.   இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் நீட் தொடர்பாக  வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து, சட்ட முன்வடிவு வழங்கியது. இந்த சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களாக குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர்  இழுத்தடித்து வருகிறார்.
 தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பல்வேறு துன்பத்திலும் மன உளைச்சலிலும் உள்ளனர். ஆனால் ஆளுநர் கண்டுகொள்ளவில்லை. கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஆளுநர் செயல்படுகிறார். உடனடியாக ஆளுநர் நீட் தொடர்பாக சட்ட வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக இந்திய அரசு குடியரசு தலைவரிடம் ஒப்புதலை பெற்று தர வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளோம், இதன் மூலமாக  ஒவ்வொரு வீட்டிற்கும் நீட்  தேர்வால் ஏற்படும் பாதிப்பை எடுத்துச்சொல்வோம்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் ஜனவரி 30ம் தேதி  காந்தி நினைவு நாளில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார். முன்னதாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். இவ்வியக்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்  கு.ராமகிருட்டிணன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி.கலையரசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, மாணவர் நல பெற்றோர் அமைப்பின் நிர்வாகி வி.தெய்வேந்திரன், சுப்பிரமணியம், கே.பாண்டியன் மற்றும் நேரு தாஸ், மலரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.