ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கல்லீரல் பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தொடர்புடைய இலங்கைத் தமிழர் சாந்தன் உள்ளிட்ட சிலருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைக்குப் பின்னர் சாந்தன் இலங்கைத் தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என அவர் கோரி வந்தார்.
இந்நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அவரை இலங்கைக்கு அனுப்ப ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றிய அரசு அனுப்பியது.
இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சாந்தனின் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டு, நேற்று முன்தினம் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சாந்தன் உயிரிழந்தார்.
சாந்தனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.