தருமபுரி, ஆக.11- தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. தருமபுரியில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளியன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றன. கவிதைப் போட்டியில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதுநிலை தமிழ் முதலாமாண்டு மாணவர் த.ராஜேந்திரன் முதலிடம், ஆட்டுக்காரன்பட்டி பரம்வீர் கல்வியல் கல்லூரியில் மாணவர் ப.சண்முகம் இரண்டாமிடம், தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவர் மா.விக்னேஷ் மூன்றாமிடம் பெற்றனர். கட்டுரைப் போட்டியில், தோக்கம்பட்டி லஷ்மி நாராயணா மகளிர் கல்லூரி மாணவி வெ.சற்குணா முதலிடம், தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவி மு.லைலா இரண்டாமிடம், தருமபுரி பி.எஸ்.ஏ. கலை,அறிவியல் கல்லூரி மாணவி வெ.வேணுகாதேவி மூன்றாமிடம் பெற்றனர். பேச்சுப் போட்டியில், தருமபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய மாணவர் மு.சந்தோஷ்குமார் முதலிடம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவி ப.தீபிகா இரண்டாமிடம், தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரி மாணவி த.சிவசங்கரி மூன்றாமிடம் பெற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரத்தை கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் சகுந்தலா பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜா.பாக்கியமணி தலைமை வகித்தார். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அ.ராஜேந்திரன் செய்திருந்தார். தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர், பிற துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் நடுவர்களாகச் செயல்பட்டனர். முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.