சென்னை:
நடப்பு கல்வியாண்டு முதல் நடைபெற உள்ள 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 ஆம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) இருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் 2019-20 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழுஅமைக்க வேண்டும். இந்த தேர்வுக்குழு பொதுத்தேர்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ளும். பொதுத்தேர்வு எழுதும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளும், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளும் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.தேர்வு கால அட்டவணை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம்வெளியிடப்படும். தற்போது நடைமுறையில் உள்ள வளர்அறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு முறையில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். இதில் வளர்அறி மதிப்பீடு மூலம்40 மதிப்பெண்களும், தொகுத்தறிமதிப்பீடு மூலம் 60 மதிப்பெண்களும் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடக்கும்.தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட சிறுபான்மை பயிற்று மொழியில் மாணவர்களுக்கு அவர்களுடைய பயிற்று மொழிகளிலேயே தேர்வு எழுதிடும் வகையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாள்களும், விடைக்குறிப்புகளும் தயார் செய்யப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விடைத்தாள்களை 5, 8 ஆம் வகுப்பு போதிக்கும் அந்தந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண் பட்டியல்களில் இருந்து ஒவ்வொரு மாணவருக்குரிய மதிப்பெண்ணை பாடவாரியாக மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்கள், கல்வி மேலாண்மை தகவல் முறைமை (இ.எம்.ஐ.எஸ்.) இணையதளத்தில் அந்தந்த மாணவருக்குரிய சுயவிவரங்கள் பட்டியலில் பதிவேற்றம்செய்ய வேண்டும்.தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.