தமிழகத்தில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவின் உகானில் தொடங்கிய கொரோனா பாதிப்பு இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் பெருந்தொற்றாக உள்ளது. இன்று தமிழகமும் கொரோனாவில் இருந்து தப்பிக்கவில்லை. தமிழக அரசு 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறைஇன்று மதியம் அறிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று இரவு, தமிழகத்தில் கொரோனாவால் கூடுதலாக 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.