நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருகிற சட்ட வரைவு குறித்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருகிற சட்ட வரைவு ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டுள்ளதா? அதனுடைய தற்போதைய நிலை என்ன? ஒப்புதல் வழி முறையில் என்ன முன்னேற்றங்கள்? என்ன கால வரையறைக்குள் முடிவு எடுக்கப்படும்? என்று கேட்டு இருந்தேன்.
அதற்கு உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.
"தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட பிரிவுகள் சட்ட வரைவு 2021" அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு 02.05.2022 அன்று வந்து சேர்ந்தது.
தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்பிற்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அது போன்று ஒன்றிய அமைச்சகங்கள்/ துறைகளின் கருத்து கேட்பு துவக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் இரண்டும் தங்களின் கருத்துகளை அளித்து விட்டன. அவற்றை தமிழ்நாடு அரசிடம் ஜூன் 21 மற்றும் 27 முறையே பகிர்ந்து கொண்டு கருத்துகளை/ விளக்கங்களை கேட்டுள்ளோம். இது போன்ற பிரச்சினைகளில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும்; ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது."
கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது. கவர்னர் கடத்திய காலமே அதிகம்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது
தமிழகத்தின் குரல். அது வெல்லும்!
வெல்லும் வரை நம் முயற்சிகளை தொடர்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.